வாலிபரை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த உதவி ஆய்வாளர் ஆதர்ஷ்! நடவடிக்கை கோரி அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்பியிடம் புகார்!
ஜி.கே.சேகரன்,
மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய பொதுமக்களை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மணல் கொள்ளையை தடுக்க கோரியும் எஸ்பிடம் அதிமுக வினர் புகார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த டி.கே.புரம் பாலாற்றில் கடந்த 25.08.2024 அன்று குளிக்கச்சென்ற முள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (21) என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அப்பகுதியில் உள்ள பாலாற்றில் கள்ளத்தனமாக இரவு நேரங்களில் மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராடிய மக்களில் இளைஞர் ஒருவரை விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் தாக்கியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த விவகாரத்தில் இதுவரை உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் மீது நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் வீதியல் இறங்கி போராடினர்.
அப்படி போராடிய மக்களை உதவியாளர் ஆதர்ஷ் உள்ளிட்ட காவல் துறையினர் கடுமையாக அணுகியுள்ளனர்.
ஆகவே மக்களை இழிவாக பேசி தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டி.கே.புரம் பாலாற்று பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் நேரில் புகார் தெரிவித்தார்.
அப்போது அவருடன் மூத்த வழக்கறிஞர்கள் பாலச்சந்தர் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.