ஃபெமா சட்டம் 37ஏ பிரிவின்படி ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்து முடக்கம் - ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?

ம.பா.கெஜராஜ்,
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
அரக்கோணம் நாடாளுமன்ற உறூப்பினரான ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த11.9.2020 அன்று சோதனை நடத்தப்பட்டதாகவும், ஃபெமா சட்டம் 37ஏ பிரிவின்படி, 89.19 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இதில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பிறகு, நீதிமன்ற உத்தரவால் கடந்த 2021 பிப்ரவரியில் பறிமுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் விதிகளை மீறி பல்வேறு முதலீடுகள் செய்திருப்பதாக நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை கடந்த 2021 டிசம்பரில் தெரிவித்து ஆதாரங்களை சமர்ப்பித்தது.
அவற்றில் கடந்த 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஷெல் நிறுவனம் (பெயரளவில் மட்டுமே பதிவு செய்யப்பட்ட, உண்மையில் இல்லாத நிறுவனம்) ஒன்றில் 42 கோடி ரூபாயும் இலங்கையில் 9 கோடி ரூபாயும் ஜெகத்ரட்சகன் தரப்பினரால் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது.
இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டில் முடக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்' என நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெகத்ரட்சகனுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
எனவே ரூ.89.19 கோடிசொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் நடந்துள்ள ஒவ்வொரு விதிமீறலுக்காகவும் அவருக்கு ரூ.908 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது என நேற்று முன் தினம் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'குற்றம் செய்ததாகக் கூறப்படும் தொகைக்கும் அபராதத்துக்கும் அதிக அளவு வித்தியசம் இருப்பது ஏன்?' என்று மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி தனியார் ஊடகம் ஒன்றுக்கு தெரிக்கையில், "சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் அவர்கள் முதலீடு செய்த தொகையின் அளவைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படுகிறது. பணப் பரிமாற்றத்தில் சொல்லப்படும் தொகையில் இருந்து பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.
அந்த வகையில், 908 கோடி ரூபாய் அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது"
மேலும் ஜெகத்ரட்சகனுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசியிருக்கும் வழக்கறிஞர் ராமமூர்த்தி, "அமலாக்கத்துறையின் அபராதத்தை எதிர்த்து தீர்ப்பாயத்தில் ஜெகத்ரட்சகன் முறையிடலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இந்த அபராதத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைக்கலாம். ஒருவேளை இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்" என்று கூறியிருக்கிறார்.
யார் இந்த ஜெகத்ரட்சகன் பின்னணி விவரங்கள்.
எ.பி.ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தார். வழுதாவூரில் பள்ளிக் கல்வியை முடித்த ஜெகத்ரட்சகன், ரயில்வே துறையில் ஊழியராகப் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், விரைவிலேயே அரசியல்தான் தனக்குச் சரியாக இருக்கும் எனக் கருதிய ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆர். துவங்கியிருந்த அ.தி.மு.கவில் இணைந்தார்.
கடந்த 1980ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அவருக்குப் போட்டியிடும் வாய்ப்பை அளித்தார் எம்.ஜி.ஆர். வெறும் 30 வயதில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றார். இதற்கடுத்து 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, அவருக்கு செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் அவர் வெற்றி பெற்றார்.
அ.தி.மு.கவுக்குள் அவருக்குப் பக்கபலமாக அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்தவுடன் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டபோது, ஜானகி அணியின் பக்கம் சென்றார் ஜெகத்ரட்சகன். 1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியடைந்தார்.
பிறகு, அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர், அ.தி.மு.கவில் இருந்து ஆர்.எம்.வீரப்பனும் நீக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். கழகத்தைத் துவங்கியபோது அதன் பொதுச் செயலாளர் ஆனார்.
அந்தக் கட்சி, 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது. அந்தக் கூட்டணியின் சார்பில் தி.மு.க. சின்னத்தில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெகத்ரட்சகன் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 2004ஆம் ஆண்டு 'வீர வன்னியர் பேரவை' என்ற அமைப்பைத் துவங்கினார்.
கடந்த 2004ஆம் ஆண்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை ஜெகத்ரட்சகன் ஆதரித்தார். ஆனால், போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது 'வீர வன்னியர் பேரவை', 'ஜனநாயக முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியாக உருமாறியது.
கடந்த 2009இல் இந்தக் கட்சி தி.மு.கவுடன் இணைந்தது. மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ஜெகத்ரட்சகனுக்கு கிடைத்தது. அந்த தேர்தலில் பா.ம.கவின் வேட்பாளரான ஆர்.வேலுவை அவர் தோற்கடித்தார்.
இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இணையமைச்சரான ஜெகத்ரட்சகன், 2012இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் இணை அமைச்சராக்கப்பட்டார். அவர் அந்தப் பதவியை ஏற்பதற்கு முன்பாகவே, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இணை அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2014இல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற அவர், 2019 மற்றும் 2024இல் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பல தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, இவரும் ஒரு அனுமதியைப் பெற்றார். 1984இல் பாரத் பொறியியல் கல்லூரியைத் துவங்கிய அவர், வெகு சீக்கிரமே அதை வளர்த்தெடுத்தார். 2002ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது.
பிறகு 2004ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரி, 2007ஆம் ஆண்டில் புதுச்சேரியில் ஸ்ரீ இலட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம், 2002 ல் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 2007ல் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைத் துவங்கினார்.
மேலும் வேறு நான்கு பொறியியல் கல்லூரிகளும் ஒரு மருத்துவக் கல்லூரியும் அவராலோ அவருக்கு நெருக்கமானவர்களாலோ நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 1999இல் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, ஒரு மதுபான ஆலையையும் ஜெகத்ரட்சகன் துவங்கினார். இதற்குப் பிறகு நட்சத்திர ஹோட்டல்கள், மருந்து நிறுவனங்கள் நிறுவனங்கள் வரிசைக்கட்டின.
கடந்த 1999ஆம் ஆண்டில் இவர் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகுதான், மதுபான ஆலைக்கு உரிமத்தைப் பெற்றார் என்பதால், அது சர்ர்சையாகவும் ஆனது.
இவரால் 2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரி ஒன்றில், எம்பிபிஎஸ் சீட்டுக்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டிக் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று, ரகசிய கண்காணிப்பு நடத்தி அதை செய்தியாக வெளியிட்டது.
மேலும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்திலும் இவரது பெயர் அலசப்பட்டது. இவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான ஜே.ஆர்.பவர் ஜெனரேஷன் பி.லிட் என்ற நிறுவனத்திற்கு 2007 ல் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டதே அதற்கு காரணம்.
பிறகு ஜே.ஆர் பவர் நிறுவன பங்குகள் கே.எஸ்.கே எனர்ஜி வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டன. 2012 ல் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் 3.85 பில்லியன் டாலர்கள் தனியார் முதலீட்டில் கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்று நிறுவப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சில்வர்பார்க் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம்தான் அந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் என்ற தகவல்கள் பின்னர் வெளியாயின.
அந்த நிறுவனத்தில், ஜெகத்ரட்சகனின் உறவினர்களே இயக்குநர்களாக இருந்த நிலையில், இவ்வளவு பணம் அவருக்குக் கிடைத்தது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
அப்போதுதான் அமலாக்கத் துறையின் பார்வை ஜெகத்ரட்சகன் பக்கம் திரும்பியது என்பது சுட்டிக்காட்டத்தகுந்ததாகும்.