குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி:- வேலூர்-திருப்பத்தூர் கலெக்டர்கள் பங்கேற்பு!

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி:- வேலூர்-திருப்பத்தூர் கலெக்டர்கள் பங்கேற்பு!

ம.பா.கெஜராஜ்,

  உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ழி மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

 

வேலூர் மாவட்டம் காந்தி சிலை அருகில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2022) துவக்கி வைத்தார்.

    உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12- ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழில் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தை தொழில்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

   எண்ணற்ற குழந்தைகள் பல தொழில்களில் அகப்பட்டு தன் கல்வி பருவத்தினை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையை மாற்ற குழந்தை தொழில்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை தனது 182-வது உடன்படிக்கையில் அறிவித்தபடி 12 ஜூன் 2002 அன்று முதல் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

   இத்தினத்தில் குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் உள்ளத்திலும் உதிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

 ஜூன் 12  குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினத்தை ''குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க உலகளாவிய சமூக ஒருங்கிணைப்பு அமைப்பு” என்ற கருப்பொருளின் கீழ் 2022 ஆம் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.

    சைல்டுலைன் 1098 திட்டம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா  மற்றும் தொழிலாளர் துறையின் சார்பாக உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள், மடிப்பேடுகள் பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி

 "இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன்" என்ற குழந்தைத் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.

   இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா ஆனந்த குமார், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பூங்கொடி, தொழிலாளர் உதவி ஆணையர் திரு.ஞானவேல், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொது மேலாளர் திரு.மோகனவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.உமாமகேஸ்வரி, குழந்தைகள் குழும தலைவர் திரு.சிவகலைவாணன், தேசிய குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்ட இயக்குனர் திரு.ராஜபாண்டியன், அரசு அலுவலர்கள், சைல்டுலைன்  அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்

திருப்பத்தூர் மாவட்டம்,

அதே போல், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்கப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்கப்பட்டது.

                        இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.திருமாவளவன், உதவி ஆணையர் (கலால்) திருமதி.பானு, தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு.ஆத்திப்பழம், அனைத்து துறை அரசு அலுவலர்கள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.