மாணவிகள் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்! ஆட்சியர் பேச்சு!

மாணவிகள் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்! ஆட்சியர் பேச்சு!

 ஜி.கே.சேகரன்,

 சோளிங்கர் பெண்ணியம் போற்றுவோம் என்ற தலைப்பில் மகளிர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

  இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்ணியம் போற்றுவோம் 2022 என்ற தலைப்பில் 181 மகளிர் உதவி மையம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு சமூக நல அலுவலர் இந்திரா தலைமை தாங்கினார்.

  கல்லூரி முதல்வர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். தமிழ் துறை பேராசிரியர் சேகர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு 181 மகளிர் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

  அப்போது கலெக்டர் பேசியதாவது: 181 மகளிர் உதவி மையம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ரகசிய சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதன்மூலம் குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகிறது.

 மேலும் பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

 கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கல்லூரி பருவத்தில் தன்னம்பிக்கையை மாணவ, மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். லட்சியத்தோடு செயல்பட வேண்டும்.

  கல்லூரி பருவத்திலேயே எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 மாணவர்கள் துணிவு, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும்.நிகழ்ச்சி முடிவில் மகளிர் உதவி மையம் போஸ்டர் வெளியீட்டு மையத்தை துவக்கி வைத்தார். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கல்லூரி கம்ப்யூட்டர் ஆய்வகத்தை திறந்து வைத்தார். அப்போது பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.