அலையாதீங்கப்பா அரசு கொடுக்கும்!

பா,ரமேஷ் ஆனந்தராஜ்,
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வாதாரம் விடியல் கிடைக்குமா என்கிற அலம்பலை மீண்டும் துவக்கியிருக்கிறார்கள். பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறிப்பாக கொரோனா, ஒமைல்ரான் தொற்று வேகமெடுத்திருக்கும் சமூக விவகாரம் ஆகியவற்றில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில் அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார்கள்.
அதற்கான சங்கம் மூலமாக ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது, அதன் விவரம் வருமாறு,
தமிழக அரசு பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய எட்டு துறைகளில் ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டார்கள்.
பத்து கல்விஆண்டுகள் கடந்த நிலையில் மரணம், ஓய்வு என 4 ஆயிரம் காலி இடங்கள் போக 12,483 பேர் ரூபாய் பத்தாயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர்.
இவர்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற இந்த நிலையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், கடந்த காலங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள், அனைத்துவகை 50 ஆயிரம் ஆசிரியர்கள், பலவகை பகுதிநேர பணியாளர்கள், பின்னர் நிரந்தரம் செய்ததைப் போலவே பகுதிநேர ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இவர்களின் பணிநிரந்தரம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று திமுக ஆட்சி அமைந்தது முதல் கொண்டே பேசும் பொருளாகி வருகிறது.
உங்கள் தொகுதி ஸ்டாலின் வாக்குறுதிபடி 100 நாளில் நிறைவேறும் எனவும், முதல் பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் எனவும், சட்டசபையில் 110 விதியில் அறிவிப்பு வரும் எனவும் ஒவ்வொரு முறையும் பரபரப்பாகி அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் எப்பொழுதுமே மக்களில் ஒருவராக அவர்களின் தேவையை உணர்ந்து செய்து வரும் நிலையில் இந்த பத்தாயிரம் தொகுப்பூதியம் பெறும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து அந்த 12000 குடும்பங்களுக்கு விடியல் தருவாரா என்று மிகவும் ஏக்கத்துடன், கனவுகளுடன் காத்திருக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியிருப்பதாவது,
2022 புத்தாண்டை ஒட்டி ஜனவரி 5ந்தேதி முதல் நடந்த சட்டசபையில் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் குறித்து ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்விக்கு, மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் பதில் சொல்லும்போது, தேர்தல் அறிக்கைபடி பணிநிரந்தரம் செய்வோம் என உறுதி செய்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.
எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள், தமிழக அரசின் கொள்கை முடிவாக 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டு விடியல் கிடைக்க வேண்டுகிறோம் என்றார்.
கொரோனா அதிகரிப்பால் ஏழை எளியோர் ஒரு நேர சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்க என்னடா என்றால் இப்படி அலையறீங்களே என்று பொதுமக்கள் கொதிக்கிறார்கள்.