கூலி தொழிலாளியின் மகள் நீதிபதியானார்!

கூலி தொழிலாளியின் மகள் நீதிபதியானார்!

 க.பாலகுரு,

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் படித்து கூலி தொழிலாளியின் மகள் நீதிபதியானார்.

 ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சாதிக்க முடியும் என்பதற்காக படித்து தேர்வில் வெற்றி பெற்றதாக நீதிபதி சுதா பெருமிதம்.

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாளாநல்லூரை சேர்ந்தவர் கணேசன், கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் கடைசி மகள் சுதா (28). இவர் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துள்ளார். திருவாரூர் அரசு திரு.வி.க. கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்று திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் தகுதி அடிப்படையில் சேர்ந்து சட்டப்படிப்பை படித்து முடித்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

   இந்த நிலையில் சுதா, தற்போது நடந்த  நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகி உள்ளார். 245 நீதிபதி காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 237 பேர் வெற்றி பெற்றனர். இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாவும் ஒருவராவார்.

இது குறித்து சுதா கூறுகையில்...

 இதற்கென தனியாக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பொருளாதார நிலையை சமாளிக்க வேலைக்கு சென்றவாரே தேர்விற்கு தயாராகி வந்தேன். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சாதிக்க முடியும் என்பதற்காக படித்து தேர்வில் வெற்றி பெற்று தற்போது நீதிபதியாக வந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.