மரம் விழுந்து பெண் காவலர் பலி! 25லட்சம் நிதி அறிவித்த முதல்வர்!!

மரம் விழுந்து பெண் காவலர் பலி! 25லட்சம் நிதி அறிவித்த முதல்வர்!!

ம.பா.கெஜராஜ்,

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து சீரமைக்கும் பணியிலிருந்த போது பெண் காவலர் பலியானார். விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  தனிப்பிரிவு அருகேயுள்ள மரம் வேரோடு மரம் சாய்ந்து விழுந்தது. 

  முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் தலையில் மீது மரம் விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 மற்றொரு  போலீஸ்காரர் முருகன் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 அரக்கோணத்தை சேர்ந்த கவிதா 2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.  தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மரம் விழுந்ததில் பலியான கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

 23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும் இளைய மகன் விஷால் மண்ணடியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

நிவாரண நிதியை 25 லட்சமாக உயர்த்திய முதல்வர்!

 விபத்து குறித்த தகவல் வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த முதலமைச்சர் மு.க்.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் உயிரிழந்த பெண் தலைமைக்காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்  வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

 பின்னர் வேலூர் நிகழ்ச்சி முடிந்து சென்னை சென்ற முதலமைச்சர் கவிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 அவருடன் அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருகன், எம்.பிக்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கூடுதல் தலைமைச்செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப.,பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., ஆட்சித்தலைவர் ஜெ.விஜயராணி, இ.ஆ.பா. மற்றும் உயர் அலுவலர்கள் உடன் சென்றனர்.

 அப்போது காவலர் கவிதாவின் மகனை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

 பின்னர் ஏற்கனவே அறிவித்த நிவாரண நிதி 10-ல் இருந்து 25 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.

 காயம் அடைந்த காவலரிடம் நலம் விசாரித்த முதல்வர்,

 இந்த விபத்தில் காயமடைந்த போக்குவரத்து தலைமைக் காவலர் திரு. முருகன் அவர்களை முதலமைச்சர் ஆஸ்பத்திரியில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தேவையற்ற மரம் மற்றும் கிளைகளை அகற்ற உத்தரவிட்ட தலைமைச் செயலாளர் !

 இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வந்திருந்தார். பின்னர் அவர் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் தலைமைச் செயலகத்திலுள்ள தேவையற்ற மரம் மற்றும் பாரம் தாங்காமல் தொங்கும் கிளைகளை அகற்ற கூறினார். அதன் பேரில் உடனடியாக பணிகள் தொடங்கியது.