நடிகை திரிஷா - எடப்பாடி - கூவாத்தூர் மையப்படுத்தி சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி! திரையுலகம் கண்டித்ததால் மன்னிப்பு கோரினார்!

உ.சசிகுமார்,
அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ என்பவரை பற்றி தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் கூவாத்தூரில் அதிமுக எம் .எல் .ஏ.க்களை தங்க வைத்தது பற்றியும், அவர்களுடன் நடிகை திரிஷாவின் பெயரைக் குறிப்பிட்டு மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார்.
இந்நிலையில் கூவத்தூர் விவகாரத்தில் தனது பெயரை இழுத்து அவதுறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு மீது கட்டாயம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை திரிஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும், பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் இறங்கி செல்லும் இதுபோன்ற நபர்களை பார்த்தால் தனக்கு அருவருப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி. ராஜு. இவர் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் அளித்தார். எனவே ஏ.வி. ராஜுவை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை ராஜூ கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அப்படியிருக்க ராஜூ எடப்பாடியையும் ஒரு முன்னணி தமிழ் நடிகையையும் ஒப்பிட்டு பேசினார். அதில் "நீ (எடப்பாடி பழனிசாமி) அன்றைக்கு சாதாரண எம்எல்ஏ. கூவத்தூரில் நீ என்ன கூத்து அடித்தாய் என்று எனக்கு தெரியும். அதிமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் என்ன கூத்து அடித்தார் என்றும் தெரியும். ஒரு பிரபல நடிகையை (திரிஷாவை பெயரை குறிப்பிட்டார்) அவர் வேண்டும் என்று அடம்பிடித்தார். எடப்பாடி சொல்லி தான் அந்த நடிகையை கருணாஸ் ஏற்பாடு செய்தார்" என ஏ.வி. ராஜு பேசியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன், பாடகி சின்மயி, நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் ஏ.வி. ராஜுவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திரிஷா ¢ இந்த விவகாரம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், "பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே செல்லும் இழிவான மனிதர்களை திரும்ப திரும்ப பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. என்னை அவதூறாக பேசியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். இனி நான் என்ன பேச வேண்டுமோ, என்ன செய்ய வேண்டுமோ அது எனது வழக்கறிஞர்கள் மூலமாக நடக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை திரிஷா கொதித்த பின்னர் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு அந்தர் பல்டியடித்து மன்னிப்பு கோரினார்.