ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் தமிழகத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை! குவைத் சென்று நான்கு நாட்களில் பரிதாபம்! 

ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் தமிழகத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை! குவைத் சென்று நான்கு நாட்களில் பரிதாபம்! 

ஜி.பாலகுரு,

  குவைத்தில் ஒட்டகம் மேய்க்க மறுத்த தமிழர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

 இந்த துப்பாக்கி சூடு பற்றின விவரம் வருமாறு,

 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து குமரன். பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 30 வயதான முத்துகுமரன் கொரோனா காலத்தில் காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கினார். ஆனால் அதிலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.

  2 மகன்களையும் படிக்க வைப்பதற்கு அவர் திணற நேரிட்டது. இதையடுத்து வெளிநாடு சென்று பணிபுரிவதற்கு அவர் முடிவு செய்தார்.

 வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.  ஆகவே குவைத்துக்கு செல்வதற்காக ஒருவரிடம் முத்துகுமரன் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார்.

 அதன் பின்னர்  தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தனக்கு குவைத் வேலை பிடிக்கவில்லை. ஊர் திரும்பிவிடலாமா? என்று யோசிக்கிறேன் என்று மனைவி வித்யாவிடம் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.

 இந்நிலையில் கடந்த 7- ந்தேதி முதல் அவரது தொலைபேசி அழைப்பு வரவில்லை.  அப்படியிருக்க கடந்த 9-ந் தேதி குவைத்தில் முத்துகுமரன் மரணமடைந்து விட்டதாக செய்தி ஒன்று அவரது மனைவி வித்யாவுக்கு வந்தது. இதனால் வித்யாவும், அவரது குடும்பத்தினரும் நிலை குலைந்து போனார்கள். கணவர் முத்துகுமரன் எப்படி மரணமடைந்தார். என்ன நடந்தது? என்பது தெரியாமல் தவிப்புக்குள்ளானார் வித்யா.

  எனவே ஐதராபாத் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போதும் சரியான பதில் கிடைக்கவில்லை. அதுபோல அரசு தரப்பு மூலம் முயற்சி செய்தபோதும் அதற்கு பலன் ஏற்படவில்லை.

  ஆனால் குவைத்தில் முத்துகுமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

  குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல் அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டுள்ளார்.

   தமிழ்நாட்டில் இருந்து அவரை அழைத்து செல்லும் போது பெரிய நிறுவனம் ஒன்றில் குமாஸ்தா வேலை வாங்கி தருவதாகத்தான் அழைத்து சென்றனர். குமாஸ்தா வேலை கிடைக்காத பட்சத்தில் வீட்டில் உள்ள சிறு சிறு பணிகளை செய்யும் உதவியாளராகவும் சேர்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

   ஆனால் குவைத்தில் அவருக்கு குமாஸ்தா வேலையோ அல்லது இதர உதவியாளர் வேலையோ எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக முத்துகுமரனை அந்த பகுதியில் உள்ள பணக்காரர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

  ஆனால் ஒட்டகம் மேய்ப்பதற்கு முத்துகுமரன் மறுத்துவிட்டார். இதனால் முதலாளியிடம் மனக்கசப்பு ஏற்பட்டது.

  இதையடுத்து முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த குவைத் முதலாளிக்கு கூடுதல் ஆத்திரம் ஏற்பட்டது.

   அவர் முத்துகுமரனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார். முத்துகுமரன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அந்த நபர் சுட்டுக்கொன்றதாக தெரிய வந்துள்ளது. குவைத்தில் இருந்து வெளியாகும் ஐமன் மேட் நியூஸ் என்ற பத்திரிகையில் 24 வயது குவைத் பிரமுகர் 30 வயது இந்திய தொழிலாளியை சுட்டுக் கொன்றுள்ளார் என்று செய்தி வெளியானது.

   முதலில் முத்துகுமரன் பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது. ஆனால் அந்த செய்தியில் சபா அல்அகமது பாலைவன பகுதியில் துப்பாக்கி சூடு நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

   ஏர் ரைபிள் மூலம் இந்திய தொழிலாளி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. குவைத் விசாரணை குழுவினர். தீவிர விசாரணை நடத்தியபிறகு தான் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது தமிழகத்தை சேர்ந்த முத்துகுமரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இது குறித்து முத்துகுமரனின் மனைவி வித்யா தெரிவிக்கையில், என் கணவர், குவைத் சென்று சேர்ந்ததும் மோகனா என்ற பெண் என்னிடம் பேசினார். அவர் அங்குள்ள உள்ளூர் ஏஜெண்ட் ஆவார். நல்ல வேலை பெற்று தருவதாக சொன்ன அவர் எனது கணவரை ஒட்டகம் மேய்ப்பதற்கு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.

   இது பற்றி எனது கணவர் தொலைபேசியில் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். இதனால் நான் அவரை ஊருக்கு திரும்பி வந்துவிடும் படி தெரிவித்தேன்.

   மோகனாவிடமும் எனது கணவரை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

   எனது கணவர் இன்று உயிரோடு இல்லை. அதுபற்றி கூட அவர்கள் சரியான தகவல் தெரிவிக்கவில்லை. எங்களது பக்கத்து ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் நான் தகவல் தெரிவித்து விசாரிக்க சொன்னேன். அப்போதுதான் எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவரம் எனக்கு தெரியவந்தது.

   இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் தகவல் பெற முயன்றேன். மாவட்ட நிர்வாகத்திடமும் முயற்சி செய்தேன். எந்த பலனும் கிடைக்கவில்லை என்றார் கண்ணீரோடு.

  இதுபற்றி திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவிக்கையில் முத்துகுமரனின் மனைவி வித்யா எனக்கு மனு கொடுத்துள்ளார். அதை உரிய அதிகாரிகளுக்கு நான் அனுப்பி இருக்கிறேன். துரிதமாக  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறார்.

 இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதினால் முத்துகுமரனின் உறவினர்களும், கிராமத்தினரும் திரண்டு வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கம் சார்பாக ஊர்வலமாக சென்றனர்.

 இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.