பெண் டிஎஸ்பி யை தாக்கியவர்கள் மீது வழக்கு! சட்டக்கல்லூரி மாணவர் உட்பட 7 பேர் கைது! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!!

 பெண் டிஎஸ்பி யை தாக்கியவர்கள் மீது வழக்கு! சட்டக்கல்லூரி மாணவர் உட்பட 7 பேர் கைது! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!!

கே.ஏ.ஜெகதீஸ்வரி ,

 பெண் டிஎஸ்பியின் தலை முடியைப் பிடித்து இழுத்து தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த செயலைக் கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளிக் குமார் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று தனது வாகனத்தில் சில மின் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு திருச்சுழியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 அப்போது திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே சென்றபோது இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட அந்த கும்பல் காளி குமாரை திடீரென கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

 இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காளிகுமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவ்வழியாக சென்ற சிலர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே காளிகுமார் உயிர் இழந்தார்.

 இதனையடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அப்படியிருக்க காளி குமாரின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததுடன், கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, இளைஞர் ஒருவர் மீது கை வைத்து அப்புறம் தள்ளினார். பதிலுக்கு அந்த இளைஞரும் தள்ள முற்பட்ட போது, அவரை டிஎஸ்பி பளார் என்று அறைந்தார்.

  ஏற்கனவே அங்கு ஆவேசமாக கூடியிருந்தவர்களை இந்த செயல் மேலும் ஆதிர்ரமூட்டியது. எனவே அவர்கள் டிஎஸ்பி காயத்ரியை சூழ்ந்துக் கொண்டனர்.

சிலர் டிஎஸ்பி காயத்ரியின் கொண்டை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சூழ்நிலையை உணராத பொலீசார் போராட்டக்காரர்களுடம் கொஞ்சம் மூர்கதனமாகவே நடந்துக் கொண்டனர்.

 அதே போல் அங்கு பணியிலிருந்து ஆண்காவலர்களின் செயலால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

 டி.எஸ்.பி.யை சூழ்ந்துக் கொண்ட காவலர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட எஸ்.பி.கண்ணன் நேரில் பார்வையிட்டார்.

 இந்த சம்பவத்தில்  சட்டக்கல்லூரி மாணவர் பாலமுருகன், பொன்முருகன், காளிமுத்து, பாலாஜி, ஜெயராம், குமார், சூரியா உள்ளிட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். வெடிகுண்டு முருகேசன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  இந்நிலையில் ஆவேசமாக இருந்த போராட்டக்காரர்களை ஆத்திரமூட்டி பிரச்சனைக்கு வித்திட்ட டிஎஸ்பி மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

  இந்நிலையில், பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி தாக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை திமுக அரசு உருவாக்கி உள்ளது என எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.