மாணவியை சிதைத்த காமுகனுக்கு 27 ஆண்டுகள் சிறை!
க.பாலகுரு
பதினொன்றாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவு.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி பொங்கலுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக தனது தாயுடன் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மாணவியை கடத்திச் சென்று அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது சம்பந்தமாக அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் குற்றவாளி ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட மகிளா விரைவு நநீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி சரத்ராஜ் குற்றவாளி ராஜ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், இந்த தொகையை தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும், மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி விட்ட காரணத்தினால் மீதமுள்ள 5 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.