"பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, வெண்ணெய்மலை என்பவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய நிலையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வராததைடுத்து, பக்கத்து வீட்டில் இருந்த பெண் ஒருவர், வீட்டுக்குச் சென்று பார்த்த பின்னர் இதை அறிந்தனர்.
உடனடியாக சிறுமியின் அம்மாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில், "பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைச்சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு.
இந்த பூமில வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா நல்லா இருக்கும்.
பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணணும்னு ஆசை. ஆனா முடியல. ஐ லவ் யூ அம்மா, சித்தப்பா, மாமா. உங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப் புடிக்கும்.
ஆனா, நான் உங்க கிட்டலாம் சொல்லாமப் போறேன். மன்னிச்சிடுங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி" என எழுதிக் கையெழுத்திட்டுள்ளார்.
ஓபிஎஸ் இரங்கல்
இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்ட கரூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியின் மரணத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் " கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது" தெரிவித்துள்ளார்.
மேலும், "அந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அப்படியே பொள்ளாச்சி சம்பவத்துக்கும் ஒரு வார்த்தை கண்டனம் தெரிவிச்சுடுங்க அய்யா.