நீதிபதியை ஏமாற்றிய வடபழனி கோவில் ஊழியர்கள்! வசமாக சிக்கி வதைபட்டனர்!

ம.பா.கெஜராஜ்,
சென்னை வடபழனி கோயில் அலுவலர்கள் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் எஸ்.எம். சுப்பிரமணியம்.
இவர் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த சனிக்கிழமையன்று சென்னை வடபழனி முருகன் கோயிலிலுக்கு குடும்பத்துடன் சென்றார்.
அப்போது அவர் தன்னை நீதிபதியாக காட்டிக் கொள்ளாமல் சக பக்தர்களைப் போலவே சாதாரணமாக சென்றார்.
அப்படியிருக்க விஐபி வரிசையில் செல்லாமல் கட்டண தரிசன வரிசையில் சென்றவர், தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து நுழைவு கட்டணமாக 150 ரூபாயை கொடுத்து, மூன்று டிக்கெட்டுகளை நீதிபதி வாங்கினார்.
அப்போது அவருக்கு இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டுகளும், ஒரு 5 ரூபாய் டிக்கெட்டும் அளிக்கப்பட்டது.
கொடுத்த தொகைக்கு 45 ரூபாய் குறைவாக டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளதையும் 45 ரூபாய்க்கான உரிய ரசீதை வழங்கும்படியும் கவுன்ட்டரில் நுழைவு சீட்டு அளித்தவரிடம் கேட்டுள்ளார் நீதிபதி. அதற்கு அந்த அலுவலர் அலட்சிய போக்கை மேற்கொண்டார்.
அதிருப்தியடைந்த நீதிபதி, இதுதொடர்பாக செயல் அலுவலரிடம் பேச வேண்டும் என்றும், அவருடைய செல்ஃபோன் எண்ணை தரும்படியும் கேட்டுள்ளார்.
செயல் அலுவலரின் தொடர்பு எண்ணை தர மறுத்த கோயில் ஊழியர்கள், வந்திருப்பவர் நீதிபதி என்று தெரியாமல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கோயில் அலுவலர்கள் ஒன்று கூடி நீதிபதியை குடும்பத்துடன் கோயிலை விட்டு வெளியேற்றினார்.
இந்த விவகாரம் குறித்து போலிஸ் பார்வைக்கு சென்றதும், அவர்கள் கோயிலுக்கு வந்தனர். அதன் பின்னரே கோயில் ஊழியர்களுக்கு நீதிபதி குறித்த விவரம் தெரியவந்தது
பின்னர் அங்கு ஓடோடி வந்த கோயிலின் செயல் அலுவலர், அதே வேகத்துடன் ஓடிசென்று அரசு தரப்பு வழக்கறிஞருடன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு ஆஜரானார்.
அப்போது, 100 கோடி ரூபாய்க்கு அதிமான சொத்தும் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் வருமானமும் வரும் வடபழநி முருகன் கோயிலில் இதுபோன்று முறைகேடு நடைபெறுவது குறித்து வருத்தமும், கண்டனமும் தெரிவித்த நீதிபதி, தமிழ்நாட்டில் இதைவிட அதிக வருமானம் வரும் கோயில்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்வியெழுப்பினார்.
அறநிலைய துறை ஆணையரும், செயல் அலுவலர்களும் இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாமானிய மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தகவல் பலகை வைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுகுறித்த அறிக்கையை ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் தனக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.