ஒமிக்ரான் இல்லை...கர்நாடக மாநிலம் அறிவிப்பு!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
புதிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் பரவக்கூடும் என்ற அச்சத்தை பெங்களூரு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வேகமாக பரவும் தன்மை வாய்ந்த 'ஒமிக்ரான்' என்ற உருமாறிய புதிய வகை கரோனா தொற்று குறித்து உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்தடைந்த இரு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.
மேலும் இவர்களுக்கு ஒமிக்ரான் இருக்கிறதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவர்களுக்கு ஒமிக்ரான் இல்லை என முடிவுகள் வந்தன.இருப்பினும் அவர்களது மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெங்களூரு புறநகர் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூரு புறநகர் துணை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "நவம்பர் 1 முதல் நவம்பர் 27 வரை தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூருக்கு சுமார் 94 பயணிகள் வந்தனர். அவர்களில் இந்த இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் நவம்பர் 11 ஆம் தேதியும், மற்றொருவர் 20 ஆம் தேதியும் பெங்களூரு வந்துள்ளனர்.
இதில் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் பொம்மனஹள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மற்றொரு நபர் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்"
புதிய வகையான ஒமிக்ரான் தொற்று பரவுதால், கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையில் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஓமிக்ரான் வைரஸின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் லாக்டவுன் போன்ற நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை செய்துள்ளது.
அதே நேரத்தில் டிசம்பர் 15க்குப் பிறகு கர்நாடகாவில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆக கர்நாடகா மாநிலம் ஒமிக்ரான் வைரஸை அண்ட விடாமல் தடுக்க அலர்ட் ஆகிவிட்டது.