வன்முறையில் எட்டுபேர் பலி!

T.Md irfan
வன்முறைக்கு அளவீடு இல்லாத மாநிலமாக உத்தரபிரதேசம் மாறிவருகிறது.
அம்மாநிலத்தில் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் கூடியிருந்தார்கள்.
அப்போது அவர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் பயணித்த கார் மோதியதைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது.
இதனால் ,விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பங்களை சந்திக்க பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் ஹர்கான் என்ற இடத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட முயன்றார்.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை வழிமறித்து கைது செய்தனர்.
தன்னை அரெஸ்ட் செய்ய வாரண்ட் உள்ளதா என்று பிரியங்கா கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அதை கண்டு கொள்ளாத போலிசார், சீதாபூர் அரசு விருந்தினர் மாளிகையில் பிரியங்காவை அடைத்தனர்.
அதனைத்தொடர்ந்து அம்மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக களம் இறங்கினார்.
பிரியங்கா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, அரசு விருந்தினர் மாளிகையில் தூய்மைப்படுத்தப்படாத அறையை துடைப்பத்தால் பிரியங்கா சுத்தப்படுத்தும் காட்சியையும் ஸ்ரீனிவாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு பேசிய பிரியங்கா "என்னை காவலில் எடுக்கப்போவதாக கூறிய காவல்துறையினர் கைது வாரன்ட் எதையும் என்னிடம் காண்பிக்கவில்லை. என்னிடம் எந்தவொரு ஆவணமும் காண்பிக்கப்படாவிட்டால் என்னை கடத்த முயல்கிறார்கள் என குற்றம்சாட்டுவேன்," என்று அவர் தெரிவித்தார்.
"பிரிவு 151 இன் கீழ் அவர்கள் 24 மணி நேரத்தில் நான் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை காவல்துறையினர் என்னிடம் தெரிவிக்காவிட்டால், என்னால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியும். ஆனால், வழக்கறிஞர்களை அணுகக் கூட என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், அந்த உரிமை எனக்கு உண்டு என்று காவல்துறையினரிடம் நான் தெரிவித்துள்ளேன்," என்றார் அவர்.
அதே போல், லக்கிம்பூருக்கு புறப்பட தயாரான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் காவல்துறையினர் அவரது வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரிடம் காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி இறந்தவர்களில் ஒரு பத்திரிகையாளரும் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.