பா.ம.க.நிர்வாகி வெட்டிக் கொலை! 102 மதுபானக்கடைகளை மூட வைத்ததன் எதிரொலியா? பதற்றம் 144 தடையுத்தரவு அமுல்!

ம.பா.கெஜராஜ்,

 ஊரடங்கு காலத்தில் கள்ளத்தனமாக இயங்கிய 102 மதுபானக்கடைகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் மூட வைத்த காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அங்கு பதற்றம் நிலவுவதால்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  காரைக்கால் அடுத்த திருநள்ளாறை சேர்ந்தவர் தேவமணி (51). காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர். கடந்த சில வருடங்களாக இடத்தகராறு, நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இவர் முன்னின்று பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் சமரசம் செய்து வைப்பர் என்கிற பெயர் உண்டு.

   புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் மதுபான கடைகள் சம்பந்தமாக பலமுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

  சில வழக்குகளில் வெற்றியும் பெற்றுள்ளார். குறிப்பாக 89 ஒயின்ஷாப்புகள், 10 சாரயக்கடைகள் மற்றும் 3 கள்ளுகடைகள் என அவற்றை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மூட வைத்தார்.

 நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக இவர் செயல்பட்டு வந்தார்.

  இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் திருநள்ளாறு தேரடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

  வீட்டின் அருகே சுரக்குடிமுனை என்ற இடத்தில் அவரை 3 பைக்குகளில் வந்த 6க்கும் மேற்பட்டவர்கள, பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் துரத்தினர்.

 கொலையாளிகளிடமிருந்து தப்பிக்க முயன்ற தேவமணியை விடாமக் துரத்திய கொலைக்காரர்கள் அவரை சரமாரியாக வெட்டினர்.

 தடுக்க முயன்றவர்களை கத்தியை காட்டி மிரட்டிய கும்பல், கொலை செய்து முடித்தவுடன், மோட்டார் சைக்கிள் மூலம் ஆளுக்கொறு பக்கம் தப்பினர்.

 இதில் தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த தேவமணி, நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

  தகவலறிந்து ஓடிவந்த ஆதரவாளர்கள் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

 போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநள்ளாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவமணி உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

  கட்சி அலுவலகம், மருத்துவமனை, தேவமணி ஆகிய இடங்களில் கட்சியினர், உறவினர்கள் குவிந்துள்ளனர். இதனால் பதற்றம் நிலவுவதால், திருநள்ளாறில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் அர்ஜுன் ஷர்மா உத்தரவிட்டுள்ளார்.

 மேலும் தேவமணி வீடு மற்றும் திருநள்ளாறு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 அதன்பேரில் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள கொலை நடந்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதை வைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

 இந்த கொலையால் திருநள்ளாறு முழுவதும் கடைகள் மூடப்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.