சிறையில் உள்ள சாராய வியாபாரிக்கு பதவி பிரமாணம்? ஆட்சியரிடம் மனைவி மனு!!

டி.முகமது இர்ஃபான்,
சாராய வியாபாரம் செய்தவரை போலிசார் பிடித்து சிறையில் அடைத்துள்ள நிலையில் அவர் உள்ளே இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென கோரி அவரது மனைவி ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் மீது சாராயம் விற்பனை செய்ததாக வாணியம்பாடி டவுன் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணன் போட்டியிட விருப்பப்பட்டார்.
அதன் பேரில் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சி 9-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவருக்கு சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது.
அதனையடுத்து அவர் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.
இவரை எதிர்த்து 4 பேர் போட்டியிட்டனர்.
அப்படியிருக்க, கடந்த 3-ந் தேதி லாலா ஏரி பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலிசாருக்கு ரகசிய தகவல் சென்றது.
அதன் பேரில் ரைடு நடத்திய போலிசார், அங்கு லாரி டியூப்கள் மற்றும் கேன்களில் 150 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்திருந்ததாக வேட்பாளர் கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 9 ஆம் தேதி அங்கு பதிவு பதிவு நடைபெற்றது, பின்னர் கடந்த 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தபோது அதில் கிருஷ்ணன் 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனால் அதிர்ந்த போட்டியாளர்கள், கிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று உள்ளடி வேலை பார்த்து வருகிறார்கள்.
இதையறிந்த சாராய வியாபாரியின் மனைவி ராஜேஸ்வரி, தமது குடும்பத்தினருடன் சென்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் என் கணவர் சாராயம் விற்பனை செய்து, தற்போது மனம் திருந்தி வாழ்ந்து வருவதாக ஏற்கனவே 22.9.2021 அன்று தபால் மூலம் கலெக்டருக்கு மனு அனுப்பியிருந்தார்.
அதை ஆட்சியரிடம் சுட்டிக்காட்டிய ராஜேஷ்வரி, தேர்தல் நேரத்தில் காவல் துறையினர் என் கணவர் மீது பொய் வழக்குப் போட்டு அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இருந்த போதும் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
ஆகவே அவர் வார்டு உறுப்பினராக பதவி ஏற்க அனுமதிக்க வழி செய்ய வேண்டுமென கோரியிருக்கிறார்.
ராஜேஷ்வரியிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இது குறித்து போலிஸ் தரப்பில் விவரம் கேட்டு பெற்றுள்ளார்.