கார் கழுவிய போது ஏற்பட்ட தகறாறுக்கு கொலை! அடப்பாவிகளா?

.ஏ.ஜெகதீஷ்வரி,
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ஆவுடையப்பன் (61) என்பவரை சந்திரேசன் நகர் பகுதியிலுள்ள அவருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் வைத்து நேற்று இரவு (17.10.2021) மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
மேலும் இதை தடுக்க சென்ற அவரது மகனான பெருமாள் (29) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் காயமைடைந்த பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆவுடையப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஸ், இ.கா.ப, அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. சங்கர், திரு. ராமகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. யாக்கோபு, திரு. பெரியநாயகம், முதல் நிலை காவலர் திரு. கண்ணன், காவலர்கள் திரு. பேச்சிமுத்து மற்றும் திரு. சிவநேச மாணிக்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி உத்தரவின்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்நத ஆவுடையப்பன் (61) என்பவரது மகன் ஆவுடையப்பன் (26) என்பவர் தாங்கள் வாங்கிய புதிய காரில் 14.10.2021 அன்று கோவிலுக்கு செல்வதற்காக தெருவில் தயாராக இருந்தபோது எதிர்வீட்டைச்; சேர்ந்த சுப்பையா மகன் பிரகாஷ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை தெருவில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்படி கழுவும் போது தண்ணீர் இவர்கள் காரின் மீது பட்டுள்ளது. இதனையடுத்து ஆவுடையப்பன் குடும்பத்தினர் கழுவும் தண்ணீர் எப்படி படலாம் என்று கேட்டதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (17.10.2021) இரவு இறந்து போன ஆவுடையப்பன் மற்றும் அவரது மகன்கள் சந்திரேசன் நகரில் உள்ள அவர்களது மாட்டுத்தொழுவத்தில் மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தபோது சுப்பையா மற்றும் அவரது சகோதரரான நாராயணன், சுப்பையா மகன்களான பிரகாஷ், ராம்ஜெயந்த் மற்றும் சிலர் சேர்ந்து ஆவுடையப்பன் (61) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தும், அதை தடுக்க வந்த ஆவுடையப்பனின் மற்றொரு மகனான பெருமாள் (29) என்பவரையும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளான தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சுப்பையா மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகிய இருவரும் இன்று ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.