கணவர் குடும்பத்தாரின் காலில் விழச்சென்னதால் இளம் பெண் மருத்துவர் தற்கொலை!

இம்மி,
திருமணம் ஆன 2 வருடங்களில் பெண் மருத்துவர் விஷம் குடித்து உயிரிழப்பு. கணவர் குடும்பத்தார் காலில் விழச்சொன்னதால் இந்த பரிதாப முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண் மருத்துவரின் தந்தை ஆம்பூர் கிராமிய காவல்நிலையம் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த மருத்துவர் இளந்தென்றல், சேலம் மாவட்டம் எம்.சி.ராஜா நகர், ஏத்தாப்பூர் 4வது வார்டு பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கடலரசி என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
அதில் இளந்தென்றல் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கடலரசி வேலூர் அடுத்த அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மருத்துவர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கடலரசி மற்றும் இளந்தென்றல் ஆகியோருக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே இளந்தென்றல் மற்றும் அவரது குடும்பத்தினர் கடலரசியிடம் விவகாரத்து கோரி நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடலரசி தனது கணவருடன் தான் வாழ்வேன் என கூறிவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.
அப்படியிருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு இளந்தென்றல் தனக்கு விவாகரத்து தரவில்லையென்றால் விஷம் அருந்தி குடித்து விடுவேன் எனவும், தன்னுடன் வாழ வேண்டும் என்றால் தனது குடும்பத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மனைவி கடலரசியிடம் தெரிவித்துள்ளார்,
இதனால் மனவேதனை அடைந்த கடலரசி சென்னையில் இருந்து, கடந்த (07.01.2025) அன்று இளந்தென்றல் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க செங்கிலிகுப்பம் வந்துள்ளார்,
அதனை தொடர்ந்து கடலரசி தனது தந்தை ராஜேந்திரனிடம் நடந்தையெல்லாம் கூறி விட்டு, மன்னிப்பு கேட்டுவிட்டு, சென்னை செல்வதாக கூறியுள்ளார்.
பின்னர், ராஜேந்திரன் 7 ஆம் தேதி மாலை மீண்டும் தனது மகள் கடலரசியிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது, செல்போனை கடலரசி எடுக்கவில்லை, மாறாக இளந்தென்றல் போன் அழைப்பை ஏற்று கடலரசி விஷம் குடித்து விட்டதாகவும், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும், தெரிவித்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் உடனடியாக தனது மகன்களை வேலூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று (08.01.2025) கடலரசி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக ராஜேந்திரனிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு நடந்தும் இளந்தென்றல் மருத்துவமனைக்கு வரவில்லையெனவும், தனது மகள் கடலரசி விஷம் குடித்து இருக்கமாட்டார், தனது மகளை இளந்தென்றல் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடலரசியின் தந்தை ஆம்பூர் கிராமிய நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகத்திடமும், ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.
இருந்தும் கூட கோட்டாட்சியர் அவர்கள் விசாரணைக்கு வராமல் நேரம் கடத்தியதாக கருதி சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டார்.
அதே போல் கடலரசியின் மரணத்துக்கு அவரது கணவர் இளந்தென்றல் தான் காரணம், ஆகவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. எனவே திருப்பத்தூர் எஸ்.பி.ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
காதல் திருமணம் செய்த பெண் மருத்துவர் இரண்டே ஆண்டுகளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.