யூ டியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்! சேனலை மூட உத்தரவு!

ம.பா.கெஜராஜ்,
யூ டியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அவரது யூடியூப் சேனலை மூட உத்தரவிட்டுள்ளது.
காவல் துறையில் உள்ள பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைதான சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.
அவர் பலமுறை ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பாக புதன்கிழமை நடந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், "சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என ஏற்கெனவே மற்றொரு வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் தொடர்ந்து இதுபோல பேசி வருகிறார்" எனத் தெரிவித்தார்.
அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், "தனது பேச்சுக்கான விளைவை மனுதாரர் தற்போது உணர்ந்துவிட்டார். இனி ஒருபோதும் அவ்வாறு பேச மாட்டார்" என்று உறுதியளித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் யூடியூப் சேனலை மூட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் இனி இதுபோன்ற நேர்காணல்களை நடத்தமாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.