மடக்கி மடக்கி வாகன சோதனை! கட்டு கட்டாக பணம் சிக்கின!

ஜி.கே.சேகரன்,
பொன்னை அருகே வாகன சோதனையில் காரில் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்.
வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள பாளையம் சோதனை சாவடி, பொன்னை.தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு காரை சோதனை செய்த போது ஆந்திரமாநிலம் சித்தூரை சேர்ந்த கரன்குமார் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் செய்த விசாரணையில் கரன்குமார் சோளிங்கரில் இரண்டு வீட்டுமனை வாங்கி உள்ளதாகவும் அதற்கான பத்திரப்பதிவு இன்று சோளிங்கர் பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும் டோக்கன் நம்பர் 101 என்றும் தகவல் தெரிவித்தார்.
ஆனால் உரிய ஆவணங்கள் இலலாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்பூரில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதனூரில் இருந்து ஒடுக்கத்தூர் செல்லும் வழியில் பாலூர் கிராமத்தில் பறக்கும் படை அலுவலர் நவீன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 2,50,000/- பறிமுதல் செய்யப்பட்டு. ஆம்பூர் சார் கருவூல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள மூத்த குடிமகன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மோகன் தாஸ் (89) என்பவரை சந்தித்து தபால் வாக்கிற்கான படிவத்தை வழங்கினார்.