சத்தியமூர்த்தி பவனுக்கு திடீரென வந்த கே எஸ் அழகிரி! கடலூர் எம்பி என்று ஆதரவாளர்கள் கோஷம்!

ம பா கெஜராஜ்,
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக என இரு பெரும் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
ஆனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இருப்பினும் உத்தேசப் பட்டியல் ஒன்று வெளியானதால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
குறிப்பாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள ரூபி மனோகரன் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு எனக்கு நெல்லையில் எம்பி சீட்டு வேண்டுமென்று ஒத்தை காலில் நிற்கிறார்.
அதற்காக அவர் அவசர அவசரமாக சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்த கையோடு டெல்லிக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்.
ஆனால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியை பீட்டர் அல்போன்ஸ்க்கு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரூபி மனோகரன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் வரும். தேவையில்லாமல் ஒரு எம்எல்ஏ தொகுதியை நாம் இழக்க வேண்டியதாக இருக்கும் என்று தலைமை கணக்கு போடுகிறதாம்.
ரூபி மனோகரன் செய்த அலப்பறையை அறிந்த பீட்டர் அல்போன்ஸ் அவரும் தம் பங்குக்கு விருப்ப மனுவை சத்தியமூர்த்தி பவனில் அளித்துவிட்டு டெல்லிக்கு நடையை கட்டியிருக்கிறார்.
இது ஒரு பறம் இருக்க செல்வப் பெருந்தகையை காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவராக அறிவித்ததில் இருந்து சத்தியமூர்த்தி பவன் பக்கமே வராமல் இருந்த முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி இன்று திடீரென சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.
அவர் காரில் இருந்து இறங்கியவுடன் கடலூர் எம்பி அழகிரி வாழ்க வருங்கால மத்திய அமைச்சர் வாழ்க என்று தொடர் கோஷங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பினர்.
அவர்களை இவ்வாறு கூச்சல் போட வேண்டாம் என்று கையை அசைததுக் காட்டிய கே எஸ் அழகிரி சத்தியமூர்த்தி பவன் அலுவலகத்துக்குள் செல்லாமல் காரில் ஏறி பறந்து விட்டார்.
கே எஸ் அழகிரி இதுவரை விருப்ப மனு கூட அளிக்கவில்லை.
இந்த ரகளை எல்லாம் நடந்தபோது இ வி கே எஸ் இளங்கோவன் ஆதரவாளர்களும் செல்வப்பருந்தகையினுடைய ஆதரவாளர்களும் சத்தியமூர்த்தி பவனில் தான் இருந்தனர் என்பது நினைவு கொள்ளக்கூடியதாகும்.