திமுக வில் மூத்த தலைவர்களுக்கு ஓய்வா?

ம.பா.கெஜராஜ்,
திமுக வில் மூத்த தலைவர்களை ஓரம் கட்ட அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப நாட்களாக பல்வேறு மேடைகளில் பேசியபோது, இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இதே மனநிலையில் தான் இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இளைஞர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் கருதுவதாகவும், இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற "கலைஞர் எனும் தாய்" புத்தக வெளியீட்டு விழாவின்போது நடிகர் ரஜினிகாந்தும் இதே கருத்தை முன்வைத்து பேசியிருந்தார். அந்த வகையில், குட்டிக் கதையை சுட்டிக்காட்டி பேசிய ரஜினி, வகுப்பறையில் புதிய மாணவர்களை விட பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் ஆசிரியருக்கு சிரமம் என தெரிவித்து இருந்தார்.
அதாவது இந்தக் கதையின் மூலம் திமுக மூத்த தலைவர்களை உவமையுடன் ரஜினிகாந்த் குறிப்பிட்டது மட்டுமன்றி, துரைமுருகன் பெயரையும் கூறி பேசியது அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது. ரஜினிகாந்தின் இந்தப் பேச்சை திமுகவினர் ஆமோதித்தனரே தவிர, மறுக்கவில்லை.
இதற்கு துரைமுருகன் அளித்த பதிலடி ஸ்பெஷல் அயிட்டமாக கருதப்பட்டது.
சரி இருந்துவிட்டு போகட்டும், திமுகவில் மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் முடிவை பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் கூடுதல் முக்கியத்துவம் பெறுவதுடன், அவரது மகன் இன்பநிதியும் கட்சியில் முக்கிய இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்காக தான் பாஜகவை போல திமுகவும் அதிரடி நடவடிக்கையைப் பின்பற்ற போவதாக கூறப்படுகிறது.
ஆக 87 வயதாகும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மட்டுமல்லாமல், 84 வயதாகும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் ஓரம் கட்டப்படலாம் என கூறப்படுகிறது.
அது நடந்தால் துரைமுருகனிடம் இருந்து திமுக பொதுச் செயலாளர் பதவியைப் பறித்து ஆ.ராசாவுக்கு கொடுக்கலாம் என தெரிகிறது. பாஜகவில் மோடிக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் விதிவிலக்கை போல திமுகவின் தலைவரான முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் விதிவிலக்காம்.
ஆனால் இதெல்லாம் உறுதிபடுத்தப்படாத தகவல்களாகவே கருதப்படுகிறது.