என் கணவரையும் என்கவுண்டர் செய்யப் போகிறார்கள்... ரவுடி நாகேந்திரனின் மனைவி புகார்!

என் கணவரையும் என்கவுண்டர் செய்யப் போகிறார்கள்... ரவுடி நாகேந்திரனின்  மனைவி புகார்!

ஆ.ஜோ,

போலீஸ் கஸ்டடியில் இருந்த திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்ததைப் போல் என்னுடைய கணவர் நகேந்திரனையும் என்கவுண்டர் செய்ய போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள் என்று வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நாகேந்திரனின் மனைவி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார்.

அதனுடைய நகலை தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் வேறு சில  கூலிப் படைகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 அப்படியிருக்க வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா? என்றும் விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

 அதில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்காக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன், சிறையில் வைத்தே கொலை திட்டத்தை ஆற்காடு சுரேஷின் தம்பிக்கு வகுத்து கொடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளதாகவும், அவரிம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சில அந்த  செய்தியில் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

 இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்தியை அவரது மனைவி விசாலாட்சி மறுத்துள்ளார்.

 இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனுரளித்திருக்கிறார். அதில் தனது கணவர் நாகேந்திரன் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், 24 ஆண்டுகளாக என்னுடைய கணவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

 ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தன்னுடைய கணவருக்கு தொடர்பு இருப்பதாக சில ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டு உள்ளன.

 இதனால் போலீஸ் கஸ்டடியில் இருந்த திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததைப் போல் என்னுடைய கணவரையும் என்கவுண்டர் செய்ய காவல்துறை முடிவு செய்திருக்கிறார்கள்.

 வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் கணவரை மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அழைத்து வரும் போது என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டம் போட்டிருக்கிறார்கள். எனவே என் கணவரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 இது குறித்து மேலும் விவரம் அறிய நாகேந்திரனின் மனைவி விசாலாட்சியிடம் பேசினோம், தற்போது அவர் ஆஸ்பத்திரிக்கு வந்திருப்பதாகவும் வீட்டுக்கு சென்றவுடன் புகாரின் நகல் அளிப்பதாகவும் சொல்லி புகாரின் நகலை பின்னர் அனுப்பி வைத்தார்.

 அதே போல், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பி.கே தெருவில் நஜீர் அஹமத் என்பவரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

  அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய வர்களுடன் நட்பு வைத்திருந்தவர்கள் வீட்டில் போலீஸ் ரைடு நடத்தியதாக தகவல்.