எப்போதும் இல்லாமல் இப்போது மெத்தனால் கலந்தது ஏன்?- கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி விவகாரம்!

ம.பா.கெஜராஜ்,
கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 51 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிரவைத்திருக்கும் நிலையில், எப்போதும் இல்லாமல் இப்போது அதில் மெத்தனால் கலந்தது ஏன் என கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பாகவும் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்திருக்கின்றன என்றாலும், நகரின் மையப் பகுதியில் மாவட்ட நீதிமன்றம், காவல் நிலையத்திற்குப் பின்புறத்தில் இருக்கும் பகுதியிலேயே வெளிப்படையாகக் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதும் அதைக் குடித்து இத்தனை பேர் பலியாகியிருப்பதும்தான் இவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குக் காரணம்.
கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது மாவட்ட நீதிமன்ற வளாகம். அதற்கு அருகிலேயே கள்ளக்குறிச்சி நகரக் காவல் நிலையமும் அமைந்திருக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள பகுதிகளில் ஜோகியர் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்கள். காய்கறிச் சந்தையில் மூட்டை தூக்குவது, கொத்தனார், பெயின்டர் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர். இந்தப் பகுதியில் குடிப்பழக்கம் மிகப்பரவலாக இருந்து வந்திருக்கிறது.
இந்தப் பணியாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.300 ரூபாய் வரையிலேயே சம்பாதிக்கிறார்கள். அரசின் மதுபான விற்பனை நிலையமான டாஸ்மாக் மதுபானக் கடைகளில், குறைந்தபட்ச விலையே ரூ.150 ரூபாயை நெருங்கிவிட்ட நிலையில், ரூ.40 - ரூ.50 ரூபாய்க்கு விற்கப்படும் கள்ளச்சாராயமாகத்தான் இவர்களுக்கு வலி நிவாரணியாக அமைந்துவிட்டது.
மேலும் இங்கிருக்கும் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் வேலைக்குச் செல்வார்கள் என்பதால், இந்தக் கள்ளச்சாராய விற்பனை 24 மணி நேரமும் நடந்துவந்திருக்கிறது.
இதனால் பெரிய அளவில் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த கள்ளச்சாராயத்துக்கு கருணாபுரத்தைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவரும்தான் சக்கரவர்திகளாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் விற்ற சாராயம் குடித்து செத்து போனவர்களின் உறவினர்கள், யார் அந்தப் பகுதியில் சாராயம் விற்றது, யாராருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து ஊடகங்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள்.
சாராயம் விற்றுவந்த கன்னுக்குட்டியின் குடிசை அருகே வசிப்பவர்கள் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். "இந்தப் பகுதியில் இரண்டு மூன்று இடங்களில் சாராயம் விற்கப்படுகிறது. அதில் பிரதானமாக இங்கேதான் விற்பார்கள். கன்னுக்குட்டியும் அவரது சகோதரர் தாமோதரனும் கொரோனா காலகட்டத்திலிருந்து இங்கே சாராயம் விற்கிறார்கள்.
கன்னுக்குட்டி - தாமோதரன் சகோதரர்களுக்கு, சின்னதுரை என்பவர்தான் சாராயத்தை விற்பனைக்குக் கொடுத்துவந்தது தெரிந்ததும் அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் ஜோசப் என்பவரது பெயரைச் சொல்ல, அவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் மாதேஷ் என்பவரிடமிருந்துதான் சாராயம் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது.
அந்த மாதஷிடம் நடக்கும் விசாரணையின் முடிவிலேயே, எங்கே தயாரிக்கப்பட்டது, எந்த இடத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது என்பதெல்லாம் தெளிவாகுமாம்.
இந்தப் பகுதிக்கான மதுவிலக்குக் காவல் பிரிவு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது. இருந்தபோதும் இவ்வளவு பெரிய அளவிலான விற்பனையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அதேபோல, இத்தனை ஆண்டுகளாக சாராயம் விற்றுவந்தவர்கள் திடீரென அதில் மெத்தனாலைக் கலந்தது ஏன் என்பது தெளிவாகவில்லை. இதில் கலக்கப்பட்ட மெத்தனால், புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவத்திருக்கிறார். புதுச்சேரியின் எந்தத் தொழிற்சாலையிலிருந்து, யார் மூலமாக இவர்களுக்கு வந்தது என்பது இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தமாக 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலான கள்ளச்சாராய சாவுகளுக்கு, அவற்றில் மெத்தனால் கலக்கப்படுவதே காரணமாக இருப்பதால் கடந்த 2002-ஆம் ஆண்டு மெத்தனாலின் பயன்பாடு, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் (1937)-இன் கீழ் கொண்டு வரப்பட்டது. மெத்தனால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு டீ நேச்சர்ட் ஸ்பிரிட், மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
என்னதான் விதிகளை புகுத்தினாலும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இந்த அபாயகரமான வேதிப்பொருள் தங்கு தடையில்லாமல் கிடைத்து வருவருகிறது.
இந்த மெத்தனால் சப்ளை தொடர்பான அனைத்து நுட்பங்களும் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பலர் சாதாரணமாக இருந்த போதேனறிந்தவர்கள் தான்.
இந்தப் பகுதியில் கோவிந்தராஜன் மட்டுமல்ல, வேறு சிலரும் சாராயம் விற்றுவந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மரணங்களை ஏற்படுத்திய சாராயத்தை விற்றது கோவிந்தராஜன் தரப்புதான் என்பதால், மற்ற சாராய வியாபாரிகளைப் பற்றி பேச யாரும் முன் வரவில்லை.
கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில் இதேபோல மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்வத்தில் சாராயம் விற்றவர்களைப் பிடித்து விசாரித்ததில், இதில் கலக்கப்பட்ட மெத்தனால், சென்னை வானகரத்திலிருந்து செயல்பட்ட ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்திலிருந்து விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இப்போது நடந்திருப்பதைப் போலவே அப்போதும் மரக்காணம் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, மேல் மருவத்தூர், மதுராந்தகம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த முறை, மதுவிலக்குப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி வரை இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.