எங்களிடமே கெத்தா? எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜகவின் சரத் பவார் ஆபரேஷன்!

எங்களிடமே கெத்தா? எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜகவின் சரத் பவார் ஆபரேஷன்!

ம.பா.கெஜராஜ்,

 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வை கதிகலங்க வைக்கலாம் என்று எதிர்கட்சிகள் கொத்தாக கூடி கெத்து காட்டினர். ஆனால் பா.ஜ.க. அதன் கில்லாடி தனத்தை மீண்டும் மகாராஷ்டிராவில் வெளிப்படுத்தி நாங்க தான் கெத்து என்றூ இந்திய அரசியலை விழிபிதுங்க வைத்திருக்கிறார்கள்.

 மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு தெரிவித்து 39 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் என அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். பின்னர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில்  மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.

  9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்கவுள்ளனர்.

 அப்படியிருக்க, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணை முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் அஜித் பவார் பகிர்ந்து கொண்டார்.

 அஜித் பவார் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார்.

 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மையை பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பிடித்தது. என்றாலும் உத்தவ் தாக்கரே தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என அடம்பிடித்ததால் சிக்கல் நீடித்தது.

 இறுதியில் அஜித் பவார் துணையுடன் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் சர்த் பவார் அப்போது அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்வதை தடுத்து 60 மணி நேரத்திற்குள் பட்நாவிஸை ராஜினாமா செய்ய வைத்தார்.

 அதன்பின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்தன. இந்த கூட்டணி நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறிவந்த பா.ஜ.க., எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்துவிட திட்டமிட்டது. இதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாய்ப்பு கிடைத்தது. உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து ஏக் நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.

  உத்தவ் தாக்கரேயின் கட்சி உடைந்தால் போதும் என்று நினைத்த பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது. சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் தற்போது அடுத்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டுள்ளது.

 தேசியவாத காங்கிரஸின் 53 எம்.எல்.ஏ.-க்களில் 39 பேர் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

  சரத் பவார் சட்டப்போராட்டம் நடத்தினாலும் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க- சிவசேனா கூட்டணி 41 இடங்களை பிடித்தது. தற்போது பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேரும் நிலை உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உள்ளது. பா.ஜ.க.வுக்கு அதிக இடங்களை பெற்றுத்தரும் ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது.

   எதிர்க்கட்சிகள் கூட்டணியால் பல இடங்கள் பறிபோனால் என்னவாகும் என்பதை யோசித்த பா.ஜ.க இந்த ஆபரேசனை வெற்றிகரமாக்கியிருக்கிறது.

   எங்கள் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது

   இந்நிலையில் எங்கள் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எது நடந்தாலும் வேதனையானது, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம்.  தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். இதற்குப் பிறகுதான் எங்கள் நம்பகத்தன்மை உயரும். அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது. ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன் என சொன்னார்.

 அஜிய்பவாரின் இந்த தடாலடியானது, சரத் பவாருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. தன்னுடைய சொந்த அண்ணன் மகனே துரோகம் செய்துள்ளார். கட்சியின் நிலை என்ன? என்பது குறித்து அவர் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலையில் அஜித் பவார் துரோகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

   அதற்கு சரத் பவார் கூறுகையில், ''குடும்பத்திற்குள் எந்த பிரச்சினையும் இல்லை. குடும்பத்திற்குள் அரசியல் குறித்து விவாதிப்பதில்லை. ஒவ்வொருவரும் அவர்களது தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள்'' என்றார். சரத் பவார் இன்று காலை சுதந்திர போராட்ட வீரரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.பி. சவான் நினைவிடத்திற்கு செல்கிறார். புறப்படும் முன் ''நான் இதுவரை யாரையும் அணுகவில்லை. நேற்றில் இருந்து யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. தற்பேது சதாரா செல்கிறேன்'' என்றார் கூலாக.