நாங்க "அடிமை அதிமுக" இல்லை வளர்மதி ஆவேசம்!!

ஜி.சாந்தகுமார்,
நாங்க அடிமை அதிமுக கிடையாது, "எங்களை பார்த்து அடிமை அதிமுக என்று சொன்னீர்களே.. இப்போ எங்களுக்கும் மானம், ரோஷம் இருக்குனு காட்டிட்டோம் பார்த்தீர்களா?" என்று அதிமுக மூத்த தலைவர் வளர்மதி ஆவேசமாக சொல்லியிருக்கிறார்.
பாஜகவை கூட்டணியில் இருந்து தூக்கியெறிந்துள்ளது அதிமுக. இந்த நடவடிக்கையை நாடகம் என்று திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
அப்படியிருக்க நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்த நிர்வாகி, பாஜக உடனான கூட்டணி முறிவை பற்றி பேசினார். "பாஜகவோடு அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிற நல்ல அறிவிப்பு வெளியான பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று வரை அதிமுகவை மு.க. ஸ்டாலினும், திமுகவினரும் எப்படி அழைத்தார்கள்? 'அடிமை அதிமுக' என்றும், 'பாஜகவின் அடிமைக் கட்சி' என்றும் தானே நம்மை அழைத்தார்கள்.
ஆனால் இன்றைக்கு, எங்களுக்கும் தன்மானம் இருக்கிறது; எங்களுக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வீரம் இருக்கிறது; எங்கள் அம்மா ஜெயலலிதாவின் தைரியம் இருக்கிறது என்று நிரூபித்துவிட்டோம் பார்த்தீர்களா? எங்களை பார்த்து அடிமை அடிமை என்று சொன்னீர்களே.. இப்போ என்ன செய்ய போறீங்க. அதிமுக எந்த காலத்திலும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை" என்று ஆவேசப்பட்டார்.