வாங்கப்பா களத்துக்கு! கரை வேட்டிகளை தட்டியெழுப்பிய முதலமைச்சர்!

வாங்கப்பா களத்துக்கு! கரை வேட்டிகளை தட்டியெழுப்பிய முதலமைச்சர்!

 உ.சசிகுமார்,

 தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக நிர்வாகிள் உடனடியாக களத்துக்கு வாங்கப்பா என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

 மேலும்மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. இதனால் திமுக நிர்வாகிகள் இரவோடு இரவாக வீதிகளில் இறங்கி முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கினர்.

 வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது ஓரிரு தீவிர புயலாக மாறி, வரும் 5-ம் தேதி வட தமிழக எல்லையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் டிசம்பர் 3-ம் தேதி முதல் வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர்கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகங்கள், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

 அப்படியிருக்க திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மக்களுக்கு நிவாரண உதவிகளை திமுக நிர்வாகிகள் செய்ய வேண்டும். கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் தத்தமது பகுதிகளில் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.   

   மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.