அரசு மருத்துவரை தாக்கிய போதை ஆசாமி! சமாளிக்க முடியாமல் தவித்த போலிஸ்! கைகொடுத்த மக்கள்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
அரசு மருத்துவரை தாக்கி, அரசியல் கட்சி பேனர்களை கிழித்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்று நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி நுழைவாயிலில் அரசியல் பிரமுகர்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகங்கை அருகே உள்ள பில்லூரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் வாகனத்தை நிறுத்தி விட்டு மது போதையில் கல்லை தூக்கி எரிந்து பிளக்ஸ் பேனரை கிழித்தார்.மேலும் அதனை அகற்ற முயன்ற போது பின்புறமாக கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சுயநினைவினை இழந்து கீழே விழுந்து கிடந்தார்.
உடனே அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மருத்துவமனையில் செய்தி சேகரிக்கச் செய்தியாளர் சென்ற போது, அவர்களை வசைபாடியதுடன், சிகிச்சை அளித்த மருத்துவரை பாக்கியராஜ் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை படம் பிடித்த செய்தியாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டல் விடுத்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் போது மருத்துவமனையில் ஒரு காவலர் மட்டுமே பணியில் இருந்ததால் போதை ஆசாமியை சமாளிக்க முடியாமல் தவித்த போது, அவருக்கு பொதுமக்கள் கை கொடுத்தனர். போதை ஆசாமிக்கு பாடம் கற்றுக் கொடுத்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் கூடுதல் காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோருகின்றனர்.
குறிப்பு:-சிவகங்கை முழுவதும் சாலைகளில் மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு ஆங்காங்கே படுத்து கிடக்கும் சம்பவம் அன்றாடம் காண முடிகிறது. இதனால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது.