லஞ்சம் வாங்கிய காவலர்களை சஸ்பெண்டு செய்த  வேலூர் எஸ்.பி.!

  ஜே.தே.பிரகாசம்,

 நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை இடைமறித்து வெளிப்படையாக லஞ்சம் பெற்ற காவலர்களை வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முனைவர்.திரு.நெ.மணிவண்ணன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது.  நேற்று (வியழன்) இரவு அங்கு வாகன தணிக்கை செய்வதற்காக போலிசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை மடக்கி  இரண்டாம் நிலைக் காவலர் சங்கர் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த நவீன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றனர். அந்த காட்சிகளை டோல்பிளாசாவை சேர்ந்த சிலர் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து பரவவிட்டனர்.

 இது குறித்த தகவல் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பார்வைக்கு சென்றது. அதன் பேரில்பேரில் விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்டவர்கள் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உறுதியானது.

 அதனை அடுத்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் சங்கர் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த நவீன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.