கால்வாயில் பாய்ந்த பைக்!

கு.அசோக்,
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் தோண்டப்பட்ட 7 அடி பள்ளத்தில் பைக்குடன் விழுந்த இளைஞரின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞரின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆம்பூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 143 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம், சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டு,வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நெடுஞ்சாலைகள் ஓரம் கால்வாய் அமைக்க 5 அடிக்கும் மேல் நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டியுள்ளனர்.
இந்நிலையில், அப்பள்ளத்தில் வங்கி மற்றும் தொலை தொடர்புகளுக்குத் தேவையான கம்பிகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
அக் கம்பிகளில் மீண்டும் இணைப்புகள் இணைக்காததால் நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். இந்நிலையில் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் நிலை தடுமாறி தவறி விழுந்தார்.
பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை உடனடியாக அக்கம்பக்கத்தினர், மீட்டு உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் இருந்த கடையின் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும், சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.