கடன் பணத்துக்காக வெடி குண்டு மேட்டரில் கோர்த்துவிட்ட வாத்தியார்!

கு.அசோக்,
வெடி குண்டு புரளி கிளப்பியதுடன், கடன் கொடுத்தவரை கோர்த்துவிட்ட வாத்தியாரால் பரபரப்பு ஏற்பட்ட்டது. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை தனியார் பள்ளி முதுகலை ஆசிரியரை டவுன் போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனை மீது வெடிகுண்டு வீசப்படும், அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100 க்கு தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட தடவை ஆண் ஒருவர் தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை நடத்தினர்.
அங்கு எந்தவித வெடிகுண்டும் இல்லை என்பதும் அது புரளி எனவும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து எண் 100க்கு போன் செய்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த கேசவன் (50) என்பதும், அவரது சொந்த ஊர் அரக்கோணம் அடுத்த குன்னத்தூர் கிராமம் எனவும் தெரிய வந்தது.
இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
கேசவன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டிஎஸ்பி வெங்கடேசன் தெரிவித்தார்.
மேலும் தனது நண்பரான தட்சிணாமூர்த்தி என்பவரிடம் கேசவன் ரூபாய் 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடன் பணத்தை தட்சிணாமூர்த்தி கேட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்க இவரும் உடந்தை என்று போலீஸிடம் கேசவன் கோர்த்து விட்டார்.
அதனால் தட்சிணாமூர்த்தியையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.