சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க பயிற்சி போதலையோ!
ம.பா.கெஜராஜ்,
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தனிநபர் அந்தரங்கம், வர்த்தகம் போன்றவற்றை ஹேக்கிங் செய்து ரகசிய தகவல்களை திருடும் குற்ற சம்பவங்களும் பெருகிவிட்டன. ஏ.டி.எம். கார்டு மோசடி, மற்றவரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் திருடுவது, பேஸ்புக், வாட்ஸ்அப், ஆன்லைன் ஷாப்பிங், திருமண தகவல், இ-மெயில் போன்றவற்றின் மூலம் மோசடி செய்தல், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி செய்தல் போன்ற நூதன பண மோசடிகளும் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.
அவற்றின் மீது வரும் புகார்களை கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் இன்னும் அது சம்மந்தமாக பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் சைபர் குற்றத் தடுப்பு பிரிவுக்கு முதன்முதலாக துணை கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் தேஷ்முக் சேகர் சஞ்சய்.
மேற்படி சைபர் குற்றங்களை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை விரைந்து கைது செய்யவும் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 காவல் மண்டலங்களிலும் தலா ஒரு சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.
இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் தற்போது நடந்து வருகிறது. அப்படியிருக்க, சென்னையில் சைபர் குற்றத்தடுப்பு பிரிவுக்கு முதன்முதலாக துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 7-வது மாடியில் தற்காலிகமாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் அவருக்கு நிரந்தர இடம் வழங்கப்பட உள்ளது. சென்னையில் அனைத்து காவல் மாவட்டங்களிலும் ஏற்கனவே ஒரு சைபர் குற்றப்பிரிவு உள்ளது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் தனியாக சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் செயல்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 4 மண்டலங்களிலும் தலா ஒரு சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் பணியாற்று வதற்காக திறமையான போலீசார் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் உள்ள 104 சட்டம்-ஒழுங்கு கவால் நிலையங்களிலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக நன்கு தெரிந்த தலா 3 போலீசார் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் அதன் தன்மைக்கு ஏற்ப போலீஸ் நிலையம் அல்லது துணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றத்தடுப்பு பிரிவு அல்லது புதிதாக தொடங்கப்பட உள்ள சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் புகார் கொடுத்தவுடன் விரைந்து துப்பு துலக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரிகள் நம்புகின்றனர்