500 -பயணிகளுடன் ரயில் கடத்தல்! பாகிஸ்தானில் பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், 500 பயணிகளுடன் பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினர் கடத்தியுள்ளனர்.
ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து, தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைச் சிறைப்படுத்தியதாக அந்த பிரிவினைவாதக் குழு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த ரயில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும், பெண்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 80 பயணிகள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பலூசிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் உள்நாட்டு ஊடகமான 'டான்' ஊடகத்திடம், ரயிலில் "கடும் துப்பாக்கிச் சூடு" நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பல பயணிகளை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ளதாகவும், அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் "தீவிரமான விளைவுகள்" ஏற்படும் என்றும் பி.எல்.ஏ எச்சரித்துள்ளது.
குவெட்டா ரயில்வே துறை கட்டுப்பாட்டு அதிகாரி முகமது காஷிப் என்பர் தெரிக்கையில் 400-450 பயணிகள் அந்த ரயிலில் பயணிக்கப் பதிவு செய்து இருந்ததாகவும் யாராவது பணயக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து எவ்வித உறுதியான தகவலும் சுயாதீனமாகக் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.