மது - விலை மாதுகளுக்கு புகலிடமான திருப்பத்தூர் பூங்கா!

ஜி.கே.சேகரன்,
மது மற்றும் விலை மாதுகளுக்கு புகலிடமாக திருப்பத்தூர் பூங்கா மாறிவிட்டதாக உள்ளூர் வாசிகள் புலம்புகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு செந்தமான சேர்மன் வீரபத்திர முதலியார் பூங்கா 1941 முதல் செயல்பட்டு வருகிறது.
நகராட்சி அலுவலகத்துக்கு நேர் எதிரில் அமைந்துள்ள அந்த பூங்காவில் திருப்பத்தூரை சுற்றி வசித்து வரும் மக்கள் நடைப்பயிற்சி செல்வது, உடற்பயிற்சி செய்வது பொழுது போக்காக வண்ணத் தொலைக்காட்சி பார்ப்பது என பல்லாண்டு காலமாக இது செயல்பட்டு வந்தது.
அரசு பள்ளிகள், மற்றும் பத்திரப்பதிவு, நகராட்சி, சார் ஆட்சியர் அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம் என மாவட்டத்தின் அத்தனை அலுவலகங்களும் இந்தப் பூங்காவை சுற்றி தான் இருக்கிறது. இதனால் வாகனங்கள் சுற்றிலும் நிற்க வைக்கப்பட்டு போக்கு வரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்கள்.
மேலும் இந்த பூங்காவில் கழிப்பறை பெயரளவுக்குத்தான் இருக்கிறது. எந்த நேரமும் கழிப்பறையை பூட்டி நிலையிலேயே உள்ளது.
அதுமட்டுமின்றி உள்ளேயே குப்பை கொட்டி வருகின்றனர். பூங்கா முழுவதும் குப்பையாகத்தான் காட்சியளிக்கிறது.
சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைந்து நிலையிலும், எப்பொழுது வேண்டுமானாலும் அங்கு விபரீதம் நடக்கலாம் என்கிற நிலை உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் பூங்காவில் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி உடைத்துவிட்டுச் செல்கின்றனர். பூங்காவில் இருந்த மிகப்பெரிய மரக்கிளை ஒன்று முறிந்து சுற்றுச்சுவர் மீது விழுந்ததில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.
ஆக திருப்பத்தூர் சிதலமடைந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சிக்கு எதிரில் உள்ள இந்த பழமைவாய்ந்த பூங்காவை பார்கின்ற போதெல்லாம் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனசு நோகாதா...? சரி பழகிப்போய் இருக்கும்!.