உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தயங்கும் வருவாய் துறை அலுவலர்கள்! அறிவிக்காமல் ஏலத்தை ரத்து செய்த வங்கி மேலாளர்!

ம.பா.கெஜராஜ்,
ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை நிறைவேற்ற திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஏனோ தெரியவில்லை தயக்கம் காட்டி வருகிறார்கள். அதே போல் எந்த ஒரு முன் அறிவிப்பும் செய்யாமல் ஏலத்தை ரத்து செய்துள்ளார் வங்கி மேலாளர்.
இது பற்றின விவரம் வருமாறு,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் சார்பில் கடந்த 24.08.24-ம் தேதி நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் திருப்பத்தூர் நகர கூட்டுறவு வங்கியின் கீழ்க்கண்ட உறுப்பினர்கள் அவர்களது அசையா சொத்தினை அடமானமாக வைத்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதால் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் 1983-வது வருடத்திய சட்டத்தின்படியும், 1988-ம் வருடத்திய விதிகளின்படியும் அவர்களது. கடன்கள் டிக்ரி செய்யப்பட்டு அதன் பேரில் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்று மனுக்கள் அடிப்படையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களின் அடமான சொத்தானது, விற்பனை அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம், திருப்பத்தூர் சரகம் அவர்களால் பகிரங்க ஏலம் விடப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
ஏலம் குறித்த விவரங்கள் மற்றும் இதர நிபந்தனைகளை வங்கியின் அறிவிப்பு பலகையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு வங்கி வேலை நேரத்தில் வங்கியின் பொதுமேலாளரை அணுகவும். ஏல விற்பனையை நிர்வாக காரணங்களால் வேறு தேதிக்கு மாறுதல் செய்யவோ அல்லது இதர காரணங்களால் ஏலத்தை நிறுத்தி விடவோ விற்பனை அலுவலருக்கு அதிகாரம் உண்டு.
வங்கியில் கடன் பெற்று தவணை தவறிய உறுப்பினர்கள் தாங்கள் பெற்ற கடன் தொகையை தாங்களாகவே வங்கியில் செலுத்தி சட்டபூர்வமான நடவடிக்கையினைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் ஏலகிரிமலையில் முத்தானூர் பகுதியில் உள்ள சொத்தின் மீது கடன் பெற்ற சின்னராஜ் மற்றும் இக்பால் பாஷா ஆகியோரின் சொத்துக்கள் 19.10.2024 ஆம் தேதி பகல் 1 மணிக்கு தலைமை அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என்று அதே நாளிதழ் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த ஏலத்தில் கலந்துகொள்ள பலர் சென்ற போது இன்று ஏலம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து சென்னையிலிருந்து ஏலம் எடுக்க வந்த ஒருவர் புலம்பிவிட்டு திரும்பினார்.
அவர் தெரிவிக்கையில் ஏலம் நடப்பதாக அறிவித்த வங்கி நிர்வாகம் ஏலத்தை ரத்து செய்ததையும் நாளிதழ் வாயிலாக அறிவிப்பு செய்திருக்க வேண்டும். அட்லீஸ்ட் வங்கியின் வெளியிலாவது அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்று சொன்னார்.
இது பற்றி வங்கியின் மேலாளர் திரு.திருப்பதியை தொடர்பு கொண்டு பேசினோம். சார் மதிப்பீட்டாளர் வரவில்லை என்பதால் தள்ளி போட்டுவிட்டோம். அதை அறிவித்திருக்க வேண்டும் தவறுதான் என்கிற ரீதியில் பேசினார்.
குறிப்பு:- மேற்படி ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் அந்த இரண்டு சொத்துக்களையும் இரயில்வே ஊழியர் ஒருவரின் தரப்பு ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளது. அந்த ஆக்கிரமிப்பாளர்கள், சொத்தின் உரிமையாளர்களை சம்மந்தப்பட்ட அந்த இடத்துக்கு வரவிடாமல் அராஜகம் செய்து வருகிறார்கள். இத்தனைக்கும் உயர் நீதிமன்றம் உரிமையாளருக்கு சொத்தை மீட்டு ஒப்படைக்க வருவாய் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால் ஏனோ தெரியவில்லை வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்.
இதேபோன்று வங்கி நிர்வாகமும் செயல்படுவதாக உள் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஆக இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட உள்ளதாம்.