தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கு டோக்கன் கொடுக்க துவங்கினர்!

கு.அசோக்,
ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தெந்த தேதியில் பொங்கல் தொகுப்பு பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் பணி இன்று தமிழகம் முழுவதும் தொடங்கியது..
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் டோக்கன் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என கூறினார்கள்.
மேலும் பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் வழக்கம்போல் பயனளிகளுக்கு டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் டோக்கன்களை வழங்கினார்கள்.