அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவன் கால் முறிந்தது! பரிட்சை எழுத அனுமதிக்க கோரிக்கை!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் புதிய கட்டடப் பணிக்கு தோண்டப்பட்டு ஒரு மாத காலமாக பணி தொடங்காமல் இருக்கும் பள்ளத்தில் தவறி விழுந்து 10 ஆம் வகுப்பு மாணவன் கால் முறிவு ஏற்பட்டது. அவனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவன் அரசு பொதுத் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவன் தேர்வு எழுத துறை சார்ந்த அதிகாரிகள் உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அழிஞ்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி திருஞானம். இவரது மகன் யோதிஸ்(15). இவன் வாணியம்பாடியில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பினான்.
மாணவன் யோதிஸ் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு ஊராட்சி மன்ற புதிய அலுவலகம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 7 அடி ஆழமுள்ள குழியில் மாணவன் தவறி விழுந்தான்.
அதில் அவனுக்கு கால் முறிவு ஏற்பட்டதால், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
அரசு பள்ளி மற்றும் கிராமத்திற்கு நடுவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக 10 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு ஒரு மாத காலமாக பணிகள் தொடங்காததால் மாணவன் விபத்தில் சிக்க நேரிட்டது என பெற்றோரும் அப்பகுதி வாசிகளும் குறை சொல்கிறார்கள். அதே போல், ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் மற்றும் அதிகாரிகள் யாரும் மாணவனை கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியிருந்தாலும், மாணவன் அரசு பொது தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். மாணவன் யோதிஸ் பொதுத்தேர்வு எழுத கல்வி அலுவலர் உதவி செய்ய வேன்டும் என மாணவரின் பெற்றோர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கிராமத்துக்கு நடுவில் 10 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு கட்டிட பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்காத மாதனூர் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார் மற்றும் ஒப்பந்ததாரர் மீது அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.