தம்பி மரணத்தில் சந்தேகம் கிளப்பிய அக்காள்!

தம்பி மரணத்தில் சந்தேகம் கிளப்பிய அக்காள்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

   விபத்துக்குள்ளாகி தம்பி  இறந்ததில் சந்தேம் இருப்பதாக அக்கா அளித்துள்ளார். ஆகவே புதைக்கப்பட்டவரின் உடல் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, மயானத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூரை சேர்ந்தவர் பாக்கியராஜ். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே, மனைவி பிரிந்து சென்று விட்டார். எனவே உடன் பிறந்த சகோதரி மேரி என்பவர் ஆதரவுடன், தனி வீட்டில் வசித்து வந்தார்.

   இந்த நிலையில் கடந்த 30ம் தேதி நள்ளிரவு பாக்கியராஜ் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்காமல், உறவினர்கள் பாக்கியராஜ் உடலை அருகே உள்ள இடுகாட்டில் புதைத்து விட்டனர்.

  அப்படியிருக்க நேற்று பாக்கியராஜ் தங்கி இருந்த வீட்டிற்கு சென்ற மேரி, வீட்டின் பல்வேறு இடங்களில் ரத்த கறை இருந்ததை பார்த்துள்ளார். ஏற்கெனவே தன்னுடைய உடன் பிறந்த மூத்த சகோதரன் அந்தோணிராஜ் என்ற வேல்முருகனுக்கும், பாக்கியராஜூக்கும் முன் பகை இருந்துள்ளது.

  இதை மனதில் கொண்டு பாக்கியராஜை அடித்து கொலை செய்து விட்டு, விபத்து போன்று ஜோடித்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்த மேரி, நேற்று தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரி இருந்தார்.

   புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இன்று உடலை தோண்டி எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி சபரிநாதன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம், மேரியின் மற்றொரு சகோதரர் குமார் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து, புதைக்கப்பட்ட பாக்கியராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

  மயானத்திலேயே துணியால் கூடாரம் அமைக்கப்பட்டு, விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவர் சுதன் அதே இடத்தில் பிரேத பரிசோதனை மேற்கொண்டார்.

 பரிசோதனையின் அறிக்கை ஒரு சில தினங்களில் கிடைக்கும் என தெரிவித்த காவல் துறையினர், முதற்கட்டமாக குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிராஜ் என்ற வேல் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.