ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்! அதுவே எனது முதன்மையான பணி! புதிய காவல் ஆணையர் அருண் உறுதி!

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்! அதுவே எனது முதன்மையான பணி! புதிய காவல் ஆணையர் அருண் உறுதி!

 ம.பா.கெஜராஜ்,

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி என்று சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் அருண் பேட்டியளித்தார்,

  மாநிலத்தையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து எதிர்கட்சிகள் தமிழக அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், அரசு தற்போது சாட்டையை சுழற்ற தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் அதிரடியாக ஓர் உத்தரவு வெளிவந்துள்ளது. அதில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரை, காவலர் பயிற்சி பள்ளியின் டிஜிபியாக மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருக்கிறார். அந்த பதவியில் ஏற்கனவே இருந்த ராஜிவ் குமார் போலிஸ் அகடமியின் இயக்குநராக மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்.

  அதே உத்தரவில் சென்னை மாநகருக்கு புதிய ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், சென்னை மாநகரம் எனக்கு புதிதல்ல. இங்கு எல்லா பிரிவுகளிலும் பணிபுரிந்துள்ளேன்.

   டிசி அண்ணா நகர், டிசி மவுண்ட், ஜேசி ட்ராபிக், ஜேசி சவுத், அடிஷினல் கமிஷனர் ட்ராபிக், அடிஷினல் கமிஷனர் நார்த். சென்னை சிட்டியில் இருக்கக் கூடிய சில பிரச்சினைகள். குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் இருக்கக் கூடிய சிக்கல்கள், ரவுடிகளை கட்டுப்படுத்துவது, போலீசில் நடைபெறும் சில கரப்ஷன் நடவடிக்கைகளை கண்ட்ரோல் பண்ணுவது, கட்டப் பஞ்சாயத்து ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வருவது என் வேலை.

 சென்னை சிட்டியில் எல்லா இடத்திலும் வேலை செய்திருக்கிறோம். இது ஒரு கூடுதல் பொறுப்பு, அவ்வளவு தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றால் பேஸிக்காக ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ் இருக்க வேண்டும். காலங்காலமாக குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்.

 அதை தடுத்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படி பா£த்தால் 2021, 2022ல் கொலைகள் குறைவாக தான் நடந்துள்ளன. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் ரவுடிகள் அட்ராசிட்டீஸை கட்டுப்படுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை விஷயத்தில் உளவுத்துறை எச்சரித்ததா? அதை சரியாக கையாளவில்லையா? என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது.

 தற்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். விசாரிக்கப்படும். சரியாக செயல்படாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு தினமும் ஒரு செயல் திட்டம் கொடுப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. புரொபஷனல் போலீசை சரியாக செய்தாலே போதும்.

 பொறுப்பை உணர்ந்து காவல்துறையினர் செயல்பட்டால் குற்றங்கள் குறையும். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதை வைத்து சொல்கிறீர்கள். காலம், காலமாக குற்றங்கள் நடந்தே வருகின்றன; அதை தடுத்து கொண்டுதான் இருக்கிறோம். குற்றங்களை தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என்றார்.

குறிப்பு:-  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக முக்கிய மூன்று உளவுத்துறைகள் ஏற்கனவே எச்சரித்திருந்தது என்று வெளியான தகவலுக்கு, அப்போதைய சிட்டி போலிஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் அப்படி ஏதும் எங்களுக்கு அலார்ட் வரவில்லை என்று செய்தியாளர்களிடையே கூறியிருந்தார். அவர் அப்படி சொன்னதில் உண்மையில்லை என்பதை அரசு அறிந்து கொண்டது. அதன் பின்னரே அவர் உடனடியாக காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

 சென்னை சிட்டியின் காவலர் ஆணையர் என்கிற டென்ஷனான சீட்டுக்கு வந்திருக்கும் அருண் ஐபிஎஸ் அவர்களின் விவரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

 காவல்துறையில் சட்டம் ஒழுங்காக இருந்தாலும் சரி, குற்ற புலனாய்வாக இருந்தாலும் சரி, போக்குவரத்து துறையில் இருந்தாலும் சரி அதிரடிக்கு பெயர்போன ஐபிஎஸ் அதிகாரியாக அருண் இருக்கிறார். அதனால் தான்தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அருணுக்கு பவர்ஃபுல் போஸ்டிங் கிடைக்கும்.

 1998 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அருண். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார்.

 ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி,  தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். பின் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றினார். சட்டம் ஒழுங்கிற்கு அருண் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகள் கவனிக்கக்கூடியதாக அமைந்தது.

 தொடர்ச்சியாக, சென்னைக்கு வந்த அருண், துணை ஆணையராக சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012ல்  காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றினார்.

மேலும், சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் - ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். பின் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.

2021 ஆம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார். திருச்சியில் கொடி கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண் ஐபிஎஸ், லாட்டரி அதிபர் உள்ளிட்ட கேங்கை கைது செய்தது பாராட்டுகளைப் பெற்றது.

2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார் அருண்.

   தமிழ்நாடு முழுவதும் கிரைம்களை கவனித்தும் போலீசாரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அருண் ஐபிஎஸ் மேற்கொண்டு வந்தார். பல இடங்களில் நில பிரச்னையில் போலீசார் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிட கூடாது என்ற அதிரடி உத்தரவையும் பிறப்பித்தவர் அருண்.

  ஆம்ஸ்ட்ராங் படுகொலை டென்ஷன் குறைவதற்குள் சென்னை மாநலர ஆண்யராக பொறுப்பேற்றிருக்கும் அருண் ஐ.பி.எஸின் அதிரடி நடவடிக்கையை பலரும் எதிர்பார்க்கின்றனர்.