அரசு பேருந்து சிறைபிடிப்பு!

அரசு பேருந்து சிறைபிடிப்பு!

ஜி.கே.சேகரன்,

 கழிவுநீர் கால்வாய் சரி செய்ய கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்!

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் அதே பகுதியில் உள்ள சுமார் இரண்டரை ஏக்கர் அளவிலான காலி இடத்தில் கழிவுநீர்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் இந்த பகுதியில் கால்வாய் வசதி இல்லை, சரியான சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை  என அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் இடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

 ஆனால்  அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வழியாக ஜலகாம்பாறை செல்லும் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 பின்னர் இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்  பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.