அரசியல்வாதியின் மனைவி, கமிஷனர் ஆபிஸ் முன் தற்கொலை முயற்சி!

ஜி.சாந்தகுமார்,
அரசியல்வாதியின் மனைவி, கமிஷனர் ஆபிஸ் முன் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் சைலஜா தனது 2 குழந்தைகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். திடீரென்று கமிஷனர் அலுவலகத்தின் 3-வது நுழைவாயில் முன்பு தலையில் மண்எண்ணெய் ஊற்றி 2 குழந்தைகளையும் கட்டிபிடித்த நிலையில் தீக்குளிக்க முயன்றார்.
அங்கு காவலுக்கு நின்ற போலீசார் சைலஜாவையும், அவரது குழந்தைகளையும் தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினார்கள்.
பின்னர் சைலஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தன்னை அடித்து கொடுமைபடுத்துவதாகவும், தனது குழந்தைகளையும், தன்னையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார் என்றும், அவர் அரசியல் கட்சி பிரமுகர் என்பதால், தான் கொடுக்கும் புகார் மனு மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த கமிஷனர் அலுவலக அதிகாரிகள், சைலஜாவையும், அவரது குழந்தைகளையும், வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவத்தால் போலீஸ் கமிஷனர் அலுவலக வாசல் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.