தனியார் கல்லூரியின் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் போலிசார்!! வெட்டப்பட்ட மரத்தை அரசு புறம்போக்கு இடத்தில் நட எதிர்ப்பு!!

கு.அசோக்,
தேசிய நெடுஞ்சாலையோரம், வெட்டப்பட்ட ஆலமரத்தை வேறு இடத்தில் நட பசுமைதாயகம் மற்றும் கிராம மக்கள் முயற்சி செய்தபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலை மறியல் நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு பின்னர், நாளை முடிவு எடுப்பதாக அதிகாரிகள் கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், கீழ்விஷாரம், புரன்சாமேடு பகுதி அருகே ஆற்காடு வேலூர் செல்லும் சாலையோரம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்த ஆலமரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அப்பகுதியில் இருந்து அகற்ற திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.
இந்த நிலையில் ஆலமரத்த்தின் மேல் பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. மீதம் இருந்த மரத்தை வேருடன் எடுத்துச்சென்று அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் நட்டு வைக்க பொது மக்கள் முயன்றனர். அதற்காக சொந்த செலவில் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த அரசு இடத்தை ஹக்கிம் என்கிற கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்த பொதுமக்கள், 3 ஜேசிபி இயந்திரங்களை ஏற்பாடு செய்து வரவைத்தனர். பின்னர் பசுமைதாயகம் மகேந்திரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து மரத்தை நட அரசுக்கு சொந்தமான இடத்தில் நட முயன்றனர்.
ஆனால் காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் மரத்தை நட கூடாது என தடுத்து, தனியார் கல்லூரிக்கு ஆதரவாக செயல்பட்டனர். அரசுக்கு சொந்தமான நிலத்தில் மரம் நடுவதை ஏன் தடுக்கிறீர்கள் ஏன ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண இருப்பதாக வாக்குறுதி கொடுத்ததால் பொதுமக்கள் கலைந்துக்சென்றனர்.