கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலிசார்!

கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலிசார்!

க.பாலகுரு,

போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொலை குற்றவாளியை காலில் சுட்டு போலீசார் கைது செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில்,  முக்கிய குற்றவாளியான மனோ நிர்மல் ராஜ் மற்றும்  அவரது நண்பர்கள் ஷியாம், தயாநிதி, மாறன், தென்னரசு, மாணிக்கம் உள்ளிட்ட ஆறு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

  இந்த நிலையில் நீடாமங்கலம் அருகே ஆதனூர் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் தலைமையான காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்தனர்.

  அப்போது தப்பி ஓடிய மனோ நிர்மல் ராஜை பிடித்த காவலர் விக்னேஷை, தன்னிடம் இருந்த அரிவாளால் மனோ நிர்மல்ராஜ் வெட்டி விட்டு தப்பி ஓட்டியுள்ளார். இதனையடுத்து நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தும், அதனை பொருட்படுத்தாமல் மனோ நிர்மல் ராஜ் தப்ப முயன்றாராம்.

  இதனையடுத்து மனோ நிர்மல்ராஜின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் கைது செய்தாராம்.

 காயமடைந்த மனோ நிர்மல்ராஜ் மற்றும் காவலர் விக்னேஷ் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிகக்கப்பட்டு வருகிறது.

  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சுட்டுபிடிக்கப்பட்ட  குற்றவாளி மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உட்பட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அது தொடர்பான போக்கிரி பதிவேடு நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

  மேலும் இதுபோன்று பழிக்கு பழி வாங்குவது, கூலிப்படை ஏவி கொலை செய்வது உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் எஸ்.பி.ஜெயக்குமார்.