மணல் திருடர்கள் அகற்றிய சிசிடிவி கேமிரா! முகமூடி கொள்ளையனுக்கு வசதி!!

ஜி.கே.சேகரன்,
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பணம் கேட்டு மிரட்டிய முகமூடி கொள்ளையன்- பதட்டத்தில் மாடியில் இருந்து குதித்து பெண்- படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சாமியார் மடம் டவர் தெருவை சேர்ந்தவர் மதன் - தாமரைசெல்வி தம்பதியினர், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மதன் கார் ஓட்டுநர் என்பதால் வெளியூருக்கு சென்றிருந்தார்.
அவரது மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர் இதனால் வீட்டில் தனியாக இருந்த தமைரைசெல்வி நேற்று மாலை வீட்டின் மேல் மாடியில் துணி காயவைக்க சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மர்ம நபர் வீட்டினுள் நுழைந்து மேல்மாடியில் தனியாக இருந்த தாமரைசெல்வியிடம் முகமூடி கொள்ளையன் திடீரென கத்தியை காட்டி நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
அப்போது செய்வது அறியாத தாமரைசெல்வி சட்டென்று 20 அடி உயர மேல்மாடியில் இருந்து குதித்து முகமூடி கொள்ளையணிடமிருந்து தப்பிக்க முயன்ற போது படுகாயமடைந்தார்.
பின்னர், தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு முகமூடிக் கொள்ளையனை பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது ஏமாந்து போயினர்.
ஏன்னா? மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி உள்ளது தெரிய வந்தது.
இதனால் கொள்ளையனை பிடிக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை இரவு நேரங்களில் மணல் கடத்துவதற்கு மணல் கொள்ளையர்கள் சேதப்படுத்தினார்களா அல்லது கொள்ளையர்கள் சேதப்படுத்தினார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தொடர்ந்து ஆம்பூரில் கடந்த சில நாட்களாக வீடுகளில் மற்றும் வீடு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்கள் கொள்ளை போகும் நிலையில், முகமூடி கொள்ளையன் நகை பணம் கேட்கும் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.