ஆலயத்தில் நடைபெற்ற நடவு திருவிழா! பாரம்பரியத்தை மறவாத மக்கள்!

ஆலயத்தில் நடைபெற்ற நடவு திருவிழா! பாரம்பரியத்தை மறவாத மக்கள்!

 க.பாலகுரு,

 திருவாரூர் மாவட்ட வடபாதிமங்கலம் அருகே திருநாட்டியத்தான்குடி அருள்மிகு ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமி ஆலயத்தில் நடவு திருவிழா நடைபெற்றது.

 விவசாயம் செழித்தால் நாடு வளமாகும் என்பதை எடுத்துக்காட்டவும், விவசாய தொழிலை காக்க இறைவனும், இறைவியும் உழவன், உழத்தியாக மாறி  மக்களோடு நாட்டு நட்டு  உழவு தொழிலுக்கு பெருமை சேர்த்த இடமான திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள திருநாட்டியத்தான்குடி அருள்மிகு ஸ்ரீமாணிக்கவண்ணர் ஆலயத்தில் நடவுத்திருவிழா  வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

  இதையொட்டி ஸ்ரீமாணிக்கவண்ணர், ரிஷப வாகனத்திலும், ஸ்ரீமங்கலாம்பிகை அம்மன் தாமரை பூ வாகனத்திலும், ஸ்ரீவினாயகர், வள்ளிதேவசேன சமேத சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வர்ர் ரிஷப வாகனத்திலும் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

 தொடர்ந்து வாத்யங்கள் இசைக்க நாற்றுகட்டுகள் எடுத்துவரப்பட்டு ஸ்ரீமங்களாம்பிகை அம்மன் கையில் நாற்று வைக்கப்பட்ட பின்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைப்பெற்றன.  தொடர்ந்து மங்கள இசையுடன் மாணிக்கவண்ணர் சுவாமியுடன் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்து கிராமத்தின் எல்லையான ஈசான மூலையில் உள்ள விவசாய நிலத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. 

 பின்னர் இறைவன், இறைவியாக  வேடம் தரித்த குழந்தைகள் வயலில் இறங்கிய பின்பு பூஜிக்கப்பட்ட புனிதநீர் வயலில் ஊற்றப்பட்டது. பின்பு ஆலயத்தில்  பூஜிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட நாற்றுகளை இறைவன், இறைவியாக   வேடம் தரித்த குழந்தைகள் நாற்றுகளை வயலில் நட்டு நடவுத்திருவிழாவை துவக்கினர்.  இதை தொடர்ந்து  விழாவிற்கு வந்திருந்தவர்கள் நாற்றுகளை வயலில் நட்டு இறைவனையும், இறைவியையும் வணங்கினர்.  இந்த விழாவில் ஏராளமானோர்  கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.