உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் என்கிறார் மந்திரி! செந்தில் பாலாஜியா? மத்திய அரசா...அய்யோ ஒரே குழப்பமா இருக்கே?!

ம.பா.கெஜராஜ்,
செய்தியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்வியை எழுப்பியதற்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுதான் ஆகணும் என்று பதிலளித்து சற்றே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஆனால் பாவம் செய்தியாளர்கள் தான் குழம்பிவிட்டனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகள் இரு வேறு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல், அவரை இலாகா இல்லாத அமைச்சராக முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட்டித்து இருப்பதும் பரவலாக விமர்சனங்க ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படியிருக்க இன்று நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி அமைந்துள்ள "இந்தியா" கூட்டணி பற்றி நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; பின் தர்மமே வெல்லும் என்பதுதான் நாம் நம்பக்கூடிய பெரிய தத்துவம். அவ்வாறு பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ள 'இந்தியா' கூட்டணியால் தர்மம் வெல்ல தொடங்கியிருக்கிறது; சூது அடி வாங்க தொடங்கியிருக்கிறது. இன்று பாஜகவின் கையில் சிக்கி, இந்த நாடு இருண்டு விடுமோ என்ற அச்சம் இருந்தது. அதை முறியடிக்க இன்றைக்கு 'இந்தியா' கூட்டணி உருவாகியுள்ளது. எனவே பாஜக என்ற இருள் விலக தொடங்கி இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு கவுன்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது. நிச்சயம் 'இந்தியா' வெல்லும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிருபர், "நீங்கள் செ?ல்வது செந்தில் பாலாஜி கைதுக்கும் பொருந்துமோ?" என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுதான் ஆகணும். வேறு என்ன செய்ய முடியும்.." என பதிலளித்து சிரித்துக்கெண்டே சென்றார்.
செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு மனோ தங்கராஜ் இவ்வாறு சொன்னாரா அல்லது மத்திய அரசை குறிப்பிட்டு சொன்னாரா என்று செய்தியாளர்கள் சற்று குழம்பித்தான் போனார்கள்.