பணிமுடிந்து திரும்பிய பெண் போலிஸ் விபத்தில் சிக்கினார்!

பணிமுடிந்து திரும்பிய பெண் போலிஸ் விபத்தில் சிக்கினார்!

 ஜி.கே.சேகரன்,

 ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஏறிய விபத்தில் தலைமை பெண் காவலர் உயிரிழந்தார்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த பரிமளா என்பவர் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.  நேற்று மாலை பணி முடிந்து  அவரது கணவர் தட்சணா மூர்த்தி உடன் இருசக்கர வாகனத்தில்  வீடு திரும்பி கொண்டிருந்தார்.

  அப்போது  மாதனூர் - ஒடுகத்துர் செல்லும் சாலையில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பழுதாகி நின்ற லோடு ஆட்டோ திடீரென பரிமளா வந்த இருசக்கர வாகனத்தின் மீது பக்கவாட்டில் மோதியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பரிமளா கீழே விழுந்துள்ளார்.

  அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் பரிமளா சிக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 உடன் பயணித்த அவரது கணவர் தட்சணாமூர்த்தி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பரிமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேலும் சாலையோரம் பழுதான லோடு ஆட்டோவை நிற்கவைத்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க ஷாப் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

  பரிமளா ஏற்கனவே விபத்தில் சிக்கி விடுப்பில் இருந்து சமீபத்தில் தான் மீண்டும் பணிக்கு வந்தாராம்.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.