ஓட்டுனர் இருக்கையில் பயணிகளை அமர வைக்க கூடாது! ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டிஎஸ்பிஅட்வைஸ்!

ஓட்டுனர் இருக்கையில் பயணிகளை அமர வைக்க கூடாது! ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டிஎஸ்பிஅட்வைஸ்!

K.A.Jagatheshwari,

 ஓட்டுனர் இருக்கையில் பயணிகளை அமர வைக்க கூடாது என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டிஎஸ்பி ப்ரீத்தி அட்வைஸ் செய்தார்.

ராஜபாளையத்தில் இயங்கும் ஆட்டோக்களால் ஏற்படும் விதிமீறல்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் டிஎஸ்பி ப்ரீத்தி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புறவழிச்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்த டிபி மில்ஸ் சாலையில், ரயில்வே மேம்பால பணிகளால் கடந்த 3 வருடங்களுக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

  எனவே பிரதான தென்காசி - மதுரை சாலை மட்டுமே தற்போது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே சாலையில் சென்று வருவதால் நாள் முழுவதும் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  இந்த நிலையில் நகருக்குள் இயங்கும் சுமார் 500 ஆட்டோக்கள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப் படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. எனவே ஆட்டோக்களின் விதிமீறல்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது.

  ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மத்தியில் பேசிய டிஎஸ்பி, சீருடை இன்றி ஆட்டோ இயக்க கூடாது, மது அருந்தி விட்டு ஆட்டோ இயக்க கூடாது,

 அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது, ஓட்டுனர் இருக்கையில் பயணிகளை அமர வைக்க கூடாது, முன்னால் மற்றும் பின்னால் பயணிப்பவர்களுக்கு இடையூறாக நீளமான கம்பி மற்றும் குழாய்களை எடுத்து செல்லக் கூடாது,

 ஆட்டோவின் மேல் பகுதியில் பாரம் ஏற்றக் கூடாது, கண்களை கூச செய்யும் எல்இடி விளக்குகள் நகருக்குள் பயன்படுத்தக் கூடாது, அனுமதிக்கப்படாத இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

 மேலும் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் காவல் துறையினரிடம் முன் வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக டிஎஸ்பி தெரிவித்தார்.