ஜனவரி இரண்டாம் வாரத்தில் பொங்கல் பரிசு வழங்கப்போகும் தமிழக அரசு!

ஜி.சாந்தகுமார்,
வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 2-வது வாரம் முதல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தற்போது மிக்ஜாம் புயலால் கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு, 25 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து, அவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது.
அதே போல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் வரலாறுகாணாத அளவில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பகுதிகளில் குடும்பங்களுக்கு ரூ.6,000, மற்ற பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரூ.1,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்க 2024 ஜனவரி 15-ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பேரிடர் பகுதிகளில் நிவாரணம் வழங்கும் பணியால் மற்ற பகுதி மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால், பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு போலவே, ரூ.1,000 ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, வெள்ள நிவாரணம் வழங்கும் நடைமுறையிலும், அரசு அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் தங்கள் பாதிப்பைகுறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்என்று அறிவிக்கப்பட்டது. அப்படியிருக்க பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்திலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.